முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 37 – பிடித்த பத்து - 2

எங்கள் தாயே, தந்தையே, ஒப்பற்ற மாணிக்கமே, அன்பினால் விளைந்த அரிய அமுதமே,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:09 PM
பகிர்:

சிவபெருமானின் திருவடிகளைப் பிடித்துக்கொண்டது பற்றிப் பாடிய பாடல்கள் இவை. திருத்தோணிபுரம் எனப்படும் சீர்காழியில் பாடப்பட்டவை.

பத்து பாடல்களின் தொகுப்பு.

213

பாடலின்பம்

அம்மையே, அப்பா, ஒப்புஇலா மணியே,

அன்பினில் விளைந்த ஆர்அமுதே,

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

புழுத்துஅலை புலையன்ஆனேன்தனக்குச்

செம்மையே ஆய சிவபதம் அளித்த

செல்வமே, சிவபெருமானே,

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்,

எங்கு எழுந்துஅருளுவது இனியே.

*

அருள்உடைச் சுடரே, அளிந்ததோர் கனியே,

பெரும்திறல் அரும்தவர்க்கு அரசே,

பொருள்உடைக் கலையே, புகழ்ச்சியைக் கடந்த

போகமே, யோகத்தின் பொலிவே,

தெருள்இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த

செல்வமே, சிவபெருமானே,

இருள்இடத்து உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கு எழுந்துஅருளுவது இனியே.

பொருளின்பம்

எங்கள் தாயே, தந்தையே, ஒப்பற்ற மாணிக்கமே, அன்பினால் விளைந்த அரிய அமுதமே,

பொய்யையே பேசி வீணாக வாழ்நாளைக் கழிக்கின்றவன் நான், கர்வத்துடன் திரிகிறவன், ஆயினும் எனக்குச் சிறப்பான சிவபதத்தை அளித்த செல்வமே, சிவபெருமானே,

இந்தப் பிறவியிலேயே உன்னைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டேன், இனி நீ வேறு எங்கு செல்ல இயலும்!

*

அருளுடைய சுடரே, கனிந்த பழமே, பேராற்றல் கொண்ட தவயோகிகளுடைய அரசே, மெய்ப்பொருள் தத்துவமே, புகழ்ந்து பேசும் சொற்களையெல்லாம் கடந்த சுவையே, யோகத்தின் பொலிவே, மனம் தெளிந்த அடியவர்களின் சிந்தனையில் புகுந்த செல்வமே, சிவபெருமானே,

அறியாமை இருளிலிருந்து விடுபடுவதற்காக உன்னைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டேன், இனி நீ வேறு எங்கு செல்ல இயலும்!

சொல்லின்பம்

ஒப்புஇலா மணியே: ஒப்பற்ற மாணிக்கமே

புலையன்: இழிவானவன்

செம்மையேஆய சிவபதம்: சிறந்த சிவபதம்

இம்மையே: இந்தப் பிறவியிலேயே

அளிந்ததோர் கனியே: கனிந்த பழமே

பெரும்திறல்: பேராற்றல்

அரும்தவர்: அரிய தவம் செய்தவர்கள்

பொருளுடைக் கலையே: மெய்ப்பொருள் தத்துவமே

போகமே: இன்பமே / சுவையே

பொலிவே: அழகே

தெருள்இடத்து: தெளிவடைந்தபோது

சிந்தை: சிந்தனை

முழு கட்டுரையைப் படிக்க →