முகப்பு
தினம் ஒரு திருவாசகம்

பகுதி 38 – திருவேசறவு - 5

நறுமணம் வீசும் இனிமையான உன்னுடைய மலர்த் திருவடிகளை மனத்தில் வளர்த்து, உள்ளம் உருக, தெருத்தெருவாகத் திரிந்து,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:10 PM
பகிர்:

திருவேசறவு என்பதைத் திரு வேசறவு என்றோ திரு ஏசறவு என்றோ சொல்லலாம். வேசறவு என்றால் மனச்சோர்வு. அதைப் போக்குமாறு பெருமானிடம் வேண்டும் பாடல்கள் இவை எனலாம். ஏசறவு என்றால் போற்றுதல், இறைவனைப் போற்றிச் சோர்விலிருந்து விடுபடுதல் என்றும் சொல்லலாம்.

பத்து பாடல்களைக் கொண்ட தொகுப்பு இது.

இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.

221

பாடலின்பம்

மருஇனிய மலர்ப்பாதம் மனத்தில் வளர்ந்து உள்உருகத்

தெருவுதொறும் மிகஅலறிச் சிவபெருமான் என்றுஏத்திப்

பருகியநின் பரங்கருணைத் தடங்கடலில் படிவாம்ஆறு

அருள்எனக்கு இங்கு, இடைமருதே இடம்கொண்ட அம்மானே.

*

நானேயோ தவம்செய்தேன், சிவாயநம எனப்பெற்றேன்,

தேனாய், இன் அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்

தானே வந்து எனது உள்ளம்புகுந்து அடியேற்கு அருள்செய்தான்

ஊன்ஆரும் உயிர்வாழ்க்கை ஒறுத்துஅன்றே வெறுத்திடவே.

பொருளின்பம்

திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் அம்மானே,

நறுமணம் வீசும் இனிமையான உன்னுடைய மலர்த் திருவடிகளை மனத்தில் வளர்த்து, உள்ளம் உருக, தெருத்தெருவாகத் திரிந்து, உன் பெயரைச் சொல்லிச் சத்தமிட்டு அலறி, ‘சிவபெருமானே’ என்று போற்றி, உன்னுடைய அருளமுதத்தைப் பருகி, உயர்ந்த கருணையாகிய பெருங்கடலில் மூழ்க வேண்டும், அதற்கு எனக்கு அருள்செய்வாயே.

*

நானா தவம் செய்தேன்?

‘சிவாய நம’ என்று சொன்னேன், அவ்வளவுதான், தேனாக, இனிய அமுதமாகத் தித்திக்கும் சிவபெருமான் தானே வந்து என் உள்ளத்தில் புகுந்தான், எனக்கு அருள்செய்தான், உடலோடும் உயிரோடும் வாழுகின்ற இந்த வாழ்க்கையை நான் அருவருத்து வெறுத்திடும்படி செய்தானே.

சொல்லின்பம்

மரு இனிய: மணம் வீசும் இனிமையான

உள் உருக: உள்ளம் உருக

தெருவுதொறும்: ஒவ்வொரு தெருவிலும்

ஏத்தி: போற்றி

பரம் கருணைத் தடம் கடலில் படிவாம்ஆறு: உயர்ந்த கருணையாகிய பெரிய கடலில் மூழ்கும் தன்மை

அம்மானே: தந்தையே

ஊன்: உடல்

ஒறுத்து: அருவருத்து

முழு கட்டுரையைப் படிக்க →