பகுதி 47 – திருவெண்பா - 2
என்னுடைய பழைய வினைகள் இரண்டையும் வேரோடு அறுத்து எனக்குமுன் காட்சி கொடுத்தான், இனி நான் பிறக்காதபடி என்னுடைய பிறவிச்சுழலை அறுத்தான் எம்பெருமான்,
சிவபெருமானைப் பற்றிய வெண்பாக்களைக் கொண்ட பகுதி இது.
திருப்பெருந்துறையில் அருளப்பட்ட பாடல்கள் இவை. பதினொரு பாடல்களின் தொகுப்பு.
253
பாடலின்பம்
முன்னை வினைஇரண்டும் வேர்அறுத்து முன்நின்றான்
பின்னைப் பிறப்புஅறுக்கும் பேராளன், தென்னன்,
பெருந்துறையில் மேய பெருங்கருணையாளன்,
வரும்துயரம் தீர்க்கும் மருந்து.
*
அறையோ அறிவார்க்கு, அனைத்துஉலகும் ஈன்ற
மறையோனும் மாலும் மால்கொள்ளும் இறையோன்,
பெருந்துறையுள் மேய பெருமான், பிரியா(து)
இருந்துஉறையும் என்நெஞ்சத்து இன்று.
பொருளின்பம்
என்னுடைய பழைய வினைகள் இரண்டையும் வேரோடு அறுத்து எனக்குமுன் காட்சி கொடுத்தான், இனி நான் பிறக்காதபடி என்னுடைய பிறவிச்சுழலை அறுத்தான் எம்பெருமான்,
அந்தப் பெருமைக்குரிய தலைவன், தென்னன், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் பெருங்கருணையாளன், சிவபெருமான், இனிவரும் துன்பங்கள் அனைத்தையும் தீர்க்கும் மருந்து அவனே.
*
அத்தனை உலகங்களையும் ஈன்ற பிரம்மனும் திருமாலும் தேடித் திணறி மயக்கம்கொள்ளும்படி அவர்கள் முன் ஜோதி வடிவாகக் காட்சி தந்த இறைவன், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான், இன்று என் உள்ளத்தில் தங்கினான், இனி எப்போதும் என்னைப் பிரியமாட்டான், இந்த விவரத்தை அனைவரும் அறிவார்கள், இதைச் சொல்லவும் வேண்டுமோ!
சொல்லின்பம்
முன்னை: முன்பு
பின்னை: பின்பு
பேராளன்: பெருமையை உடையவன்
தென்னன்: தென்னாட்டின் இறைவன் / சிவபெருமான்
மேய: எழுந்தருளிய
அறையோ: சொல்லவேண்டுமோ?
ஈன்ற: வழங்கிய
மறையோன்: பிரம்மன்
மால்கொள்ளும்: மயங்கும்
உறையும்: வசிப்பான்