பகுதி - 90
முருகனுக்கு ‘செட்டி’ என்றொரு பெயர் உண்டு. பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முகக் கவசத்தில் “இனமெனத் தொண்ட ரோடும் இணக்கிடும் செட்டி காக்க” என்பார். இதைத் தவிர இன்னொரு மிகப் பிரபலமான பாடலும் உண்டு.
முருகனுக்கு ‘செட்டி’ என்றொரு பெயர் உண்டு. பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முகக் கவசத்தில் “இனமெனத் தொண்ட ரோடும் இணக்கிடும் செட்டி காக்க” என்பார். இதைத் தவிர இன்னொரு மிகப் பிரபலமான பாடலும் உண்டு.
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமப்பார் இச்சரக்கை – மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியா ரே.
இணையத்தில் இந்தப் பாடல் பல வடிவங்களில் உலா வருகிறது. மூன்றாம் அடியில் ‘சீரகம் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்’ என்றும் பாடம் சொல்கிறார்கள். முதற்சீரின் ‘சீ’க்கு மோனை, மூன்றாம் சீரின் ‘தே’. அதுபோலவே சீரகம் என்பது யாப்புக்குப் பொருந்தினாலும் ஓசையில் குறைகிறது. எனவே மேலே இருப்பது பொருத்தமான பாடம். இதை இயற்றியவர் காளமேகம் என்றும் இணையமெங்கிலும் சொல்லப்படுகிறது. இதை இயற்றியவர் சொக்கநாதப் புலவர். இந்தச் சிலேடைக்கான முதற்பொருள்:
Advertisement
திருவேரகம் என்ற ஊரிலுள்ள செட்டியாரே, வெங்காயம் சுக்காக ஆகிவிடுமானால் வெந்தயம் (என்ற உணவுப் பொருளால்) என்ன பயன்? இந்தச் சரக்கை இங்கே யார் சுமப்பார்கள்? மங்காத சீரக்ததைத் தருவீரானால், எனக்குப் பெருங்காயம் வேண்டியதில்லை.
இரண்டாம் பொருள் அல்லது மறைபொருள்: திருவேரகத்தில் வீற்றிருக்கும் முருகரே (செட்டியாரே) வெம் காயம்—கொடியதான இந்த உடல்—தவத்தால் சுக்கைப் போல வற்றிவிடுமானால் வெந்த அயத்தால்—கொடிய வினையால்—என்ன நேர்ந்துவிடும்? இதற்கு மேலும் இந்த உடலை இங்கே யார் சுமந்திருக்கப் போகிறார்கள்? சீர் அகத்தை—சீரியதான மோட்சத்தைத்—தருவிரானால், பலப்பல வடிவங்களிலே தோன்றும் பெரிய காயத்தை (உடலை) தேடவேண்டியதில்லை.
இந்தப் பாடலுக்குச் சுருக்கமாகப் பொருள் சொல்லியிருக்கிறேன். ஏரகத்துச் செட்டியாரே என்ற பெயரால் முருகன் அழைக்கப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டவே இந்தப் பாடல் தேவைப்பட்டது. அருணகிரியாரே ‘விட்ட புழுகுபனி நீர்கத்தூரி’ திருப்புகழில் ‘செட்டி யெனுமொர்திரு நாமக் கார’ என்று முருகனை அழைக்கிறார்.
செட்டி யென்றுசிவ காமி தன்பதியில்
கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட
சித்த முங்குளிர நாதி வண்பொருளை ...... நவில்வோனே
என்று ‘கட்டி முண்டகர பாலி யங்கிதனை’ திருப்புகழில், இந்தச் செட்டி என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்பதையும் சொல்கிறார். வள்ளிமலையில், வள்ளியம்மையை மணப்பதற்காக வளையல்காரச் செட்டிக் கோலத்தில் வந்தவன் என்பது இப்பாடலில் சொல்லப்படுகிறது. அடியாரிடம் பக்தியையோ அவர்களுடைய வினைகளையோ பெற்றுக்கொண்டு அவர்களுக்குப் பரகதியை நல்கும் பண்டமாற்று வணிகன் என்ற பொருளையும் வாரியார் சுவாமிகளைப் போன்றோர் சொல்கிறார்கள்.
இனி சேவல் விருத்தத்தின் நான்காம் பாடலுக்கு வருவோம். இந்தப் பாடலில் ‘வித்தைக் குணக்கடல், புகழ்ச்செட்டி, சுப்ர மணியன்’ என்று முருகனை அழைப்பதைக் காணலாம். இப்போது பாடலைப் பார்த்துப் பதிவைக் கேட்கலாம். பொருளை நாளை காணலாம்.
அச்சப்ப டக்குரல் முழக்கிப் பகட்டியல
றிக்கொட்ட மிட்டம ரிடும்
அற்பக் குறப்பலிகள் வெட்டுக்கள் பட்டுகடி
அறுகுழை களைக்கொத் தியே
பிச்சுச் சினத்துதறி எட்டுத்திசைப் பலிகள்
இட்டுக் கொதித்து விறலே
பெற்றுச் சுடர்ச்சிறகு தட்டிக் குதித்தியல்
பெறக்கொக் கரித்து வருமாம்
பொய்ச்சித் திரப்பலவும் உட்கத் திரைச்சலதி
பொற்றைக் கறுத் தயில்விடும்
புத்திப்ரி யத்தன்வெகு வித்தைக் குணக்கடல்
புகழ்ச்செட்டி சுப்ர மணியன்
செச்சைப் புயத்தன்நவ ரத்னக்ரி டத்தன்மொழி
தித்திக்கு முத்த மிழினைத்
தெரியவரு பொதிகைமலை முநிவர்க் குரைத்தவன்
சேவற் றிருத்து வசமே.
</p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/237649664&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>