முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 64

இந்தப் பாடலில் வரும் மாதாநுபங்கி என்பதற்கு தாயும் ஆனவன் (தாயுமானவன்) என்று பொருளுண்டு.

Updated On : 13 நவம்பர், 2015 at 2:50 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:04 PM

இன்று மயில் விருத்தத்தின் மூன்றாம் பாடலைப் பார்க்கிறோம். இந்தப் பாடலில் வரும் மாதாநுபங்கி என்பதற்கு தாயும் ஆனவன் (தாயுமானவன்) என்று பொருளுண்டு. ஆனால் இந்தப் பாடலில் இடம்பெறும் மாதாநுபங்கி திருவள்ளுவரைக் குறிக்கிறது. திருவள்ளுவருக்கு மாதானுபங்கி என்ற பெயர் இருப்பதை திருவள்ளுவ மாலையில் - 

உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்

உத்தர மாமதுரைக்கு அச்சென்ப - இப்பக்கம்

Advertisement

மாதானுபங்கி மறுவுஇல் புலச்செந்நாப்

போதார் புனற்கூடற்கு அச்சு

என்ற நல்கூர் வேள்வியார் பாடலால் அறிகிறோம்.

ஆனால், ‘திருவள்ளுவர்தான், ஆனா திருவள்ளுவர் இல்ல’—என்று இந்த விளையாட்டு தொடர்கிறது. திருவள்ளுவர் பிரமனுடைய அவதாரம். இதையும் திருவள்ளுவ மாலையில் -  

நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்

தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூல்முறையை

வந்திக்க சென்னிவாய் வாழ்த்துகநல் நெஞ்சம்

சிந்திக்க கேட்க செவி

என்ற உக்கிரப் பெருவழுதியார் பாடலாலும்,

ஐயாரும் நூறும் அதிகாரம் மூன்றுமாம்

மெய்யாய வேதப் பொருள்விளங்கப் - பொய்யாது

தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி

அந்தாமரை மேல் அயன்

என்ற காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடலாலும் அறிகிறோம்.

ஆக, இந்தப் பாடலில் மாதாநுபங்கி என்ற பெயருள்ள வள்ளுவரைச் சொல்லி, வள்ளுவராக அவதரித்த பிரமனைச் சொல்லி, இந்த பிரமனுக்கு சகோதரியான வள்ளி என்று பாடுகிறார். திருவள்ளுவ மாலையில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் திருப்புகழிலும் எதிரொலித்திருக்கின்றன என்பதற்கு இந்தப் பாடல் ஓர் எடுத்துக்காட்டு. இந்த உறவுமுறை விளக்கங்களை நாளைக்குப் பார்ப்போம். இப்போது பாடலும், பதிவும்:

ஆதார பாதளம் பெயரஅடி பெயரமூ

தண்டமுக டதுபெயரவே


ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயரஎறி

கவுட்கிரி சரம்பெயரவே


வேதாள தாளங்க ளுக்கிசைய ஆடுவார்

மிக்கப் ரியப்படவிடா


விழிபவுரி கவுரிகண் டுளமகிழ விளையாடும்

விஸ்தார நிர்த்த மயிலாம்


மாதாநு பங்கியெனு மாலது சகோதரி

மகீதரி கிராத குலிமா


மறைமுநி குமாரிசா ரங்கநந் தனிவந்த

வள்ளிமணி நூபுர மலர்ப்


பாதார விந்தசே கரனேய மலரும்உற்

பலகிரி அமர்ந்த பெருமாள்


படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப்

பசுந்தோகை வாகை மயிலே.

</p><p align="JUSTIFY"> </p><p><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/232870654&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.