முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 160

எந்த மனத்தையும் உறையச் செய்யும், உருகச் செய்யும் பாடலொன்று கந்தர் அலங்காரத்தில் உண்டு.

Updated On : 23 பிப்ரவரி, 2016 at 12:48 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:06 PM

எந்த மனத்தையும் உறையச் செய்யும், உருகச் செய்யும் பாடலொன்று கந்தர் அலங்காரத்தில் உண்டு.

தோலாற் சுவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு
காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்
பாலார்க்கையிட்டுத் தசைகொண்டு வேய்ந்த அகம்பிரிந்தால்
வேலாற் கிரிதொளைத் தோனிரு தாளன்றி வேறில்லையே

இந்த உடலானது எப்படி அமைந்திருக்கிறதென்றால், இதற்குத் தோலே சுவர்; நாலும் ஆறும் (பத்து) கால் — காற்று — தச வாயுக்களால் சுமக்க வைத்து; இரண்டு கால்களின்மேலே எழுந்து நிற்க வைத்து; மேல் முகட்டை வளைந்த முதுகால் அமைத்து; இரண்டு கரங்களைப் பொருத்தி; நரம்பால் கட்டி, மாமிசத்தால் வேயப்பட்ட இந்தக் கூட்டைவிட்டுச் செல்லும்போது, வேலைக் கொண்டு கிரெளஞ்ச மலையைத் துளைத்தவனுடைய இரண்டு தாளைத் தவிர வேறு துணையில்லையே என்று பொருள்.

Advertisement

இந்தக் கருத்து இந்தத் திருவாவினன்குடித் திருப்புகழில் அப்படியே எதிரொலிக்கிறது. இரண்டாமடியில் உள்ள கானரம்புதிரத் தோல் வழும்பு உறு பொய்க் காயம் என்றால், கால் (காற்று) நரம்பு, உதிரம், தோல், கொழுப்பு இவற்றாலே ஆன பொய்யான மெய் அல்லவா இது என்று பொருள். உயிர் சுமந்து அலையும் காலம் முழுவதும் யார்யாரையோ வணங்கித் திரிந்தாலும், உயிர் போகின்ற நேரத்தில் உற்ற துணை ஒன்றே ஒன்றுதான் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார் குருநாதர். பாடலைப் பார்ப்போம்.

தானனந் தனனத் தானனந் தனனத்
தானனந் தனனத் - தனதான

காரணிந் தவரைப் பாரடர்ந் துவினைக்
காதல்நெஞ் சயரத் - தடுமாறிக்
கானரம் புதிரத் தோல்வழும் புறுபொய்க்
காயமொன் றுபொறுத் - தடியேனும்
தாரிணங் குகுழற் கூரணிந் தவிழிச்
சாபமொன் றுநுதற் - கொடியார்தம்
தாள்பணிந் தவர்பொற் றோள்விரும் பிமிகத்
தாழ்வடைந் துலையத் - தகுமோதான்
சூரனங் கம்விழத் தேவர்நின் றுதொழத்
தோயமுஞ் சுவறப் - பொரும்வேலா
தூய்மைகொண் டகுறத் தோகைநின் றபுனச்
சூழ்பெருங் கிரியிற் - றிரிவோனே
ஆரணன் கருடக் கேதனன் தொழுமுற்
றாலமுண் டவருக் - குரியோனே
ஆலையும் பழனச் சோலையும் புடைசுற்
றாவினன் குடியிற் - பெருமாளே.

</p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/248462310&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.