முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 230

இன்றைய பாடல் பழநித் தலத்துக்கானது.  பாண்டியனுடைய வெப்புநோயைப் போக்கிய, சமணரை வாதில் வென்ற சமர்த்தனே

Updated On : 3 மே, 2016 at 5:52 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:40 PM

இன்றைய பாடல் பழநித் தலத்துக்கானது.  பாண்டியனுடைய வெப்புநோயைப் போக்கிய, சமணரை வாதில் வென்ற சமர்த்தனே என்று முருகனை இப்பாடலிலும் அழைக்கிறார்.  ‘துரகமுகக் கோதைக்கு இடை (இடைந்த, இடைஞ்சலுக்குத் தளர்ந்த) புலவரில் நக்கீரர்க்கு உதவிய வேளே’ என்று அழைக்கிறார்.  இந்தக் கருத்தையே வேல் வகுப்பில்:

பழுத்தமுது தமிழப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும்

என்றும் சொல்கிறார்.  இக்கருத்தை பூதவேதாள வகுப்பு, வேடிச்சி காவலன் வகுப்பு, புய வகுப்பு போன்ற திருவகுப்புகளிலும், திருப்புகழிலேயே பல பாடல்களிலும் சொல்கிறார்.  ‘நக்கீரர் அடைபட்டுக் கிடந்த குகையை வேல் இடித்துப் பொடியாக்கியது’ என்பது அடிநாதமாக ஓடும் கருத்து.  கற்கிமுகி என்ற குதிரைமுகமுடைய பூதமொன்று 999 புலவர்களை அடைத்து வைத்திருந்தது.  ஆயிரம் புலவர்கள் சேர்ந்ததும் உண்ணலாம் என்பது எண்ணம்.  நக்கீரரோடு ஆயிரம் நிறைவடைந்தது.  அந்தச் சமயத்தில்தான் ‘உலகம் உவப்ப’ என்று முருகன் அடியெடுத்துக் கொடுக்க நக்கீரர் திருமுருகாற்றுப் படையைப் பாடினார்.  முருகன், குகையை வேல்கொண்டு பிளந்தான்.  அடைபட்டிருந்த அத்தனைப் புலவர்களும் விடுபட்டனர். 

தமிழில் முப்பால் என்றால் அது திருக்குறளை மட்டுமே குறிக்கும்.  ‘திருக்குறளிலும் மேலான தேவாரத்தை இயற்றியவனே’ என்று பாடல் முடிகிறது.  பழநிப் பதியை அடைந்து உன் நற்றாளைப் பற்ற வேண்டும் என்பது பாடலின் மையக் கருத்து.

Advertisement

தனதன தத்தா தத்தன தனதன தத்தா தத்தன

                 தனதன தத்தா தத்தன         தனதான

அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு

        மறவிலி வித்தா ரத்தன               மவிகார

     அகில்கமழ் கத்தூ ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள

        வருள்பவர் நட்பே கொட்புறு           மொருபோதன்

பகலிர விற்போ திற்பணி பணியற விட்டா ரெட்டிய

        பரமம யச்சோ திச்சிவ                 மயமாநின்

     பழநித னிற்போ யுற்பவ வினைவிள கட்சேர் வெட்சிகு

        ரவுபயில் நற்றாள் பற்றுவ             தொருநாளே

புகலிவ னப்பே றப்புகல் மதுரைமன் வெப்பா றத்திகழ்

        பொடிகொடு புற்பாய் சுற்றிகள்          கழுவேறப்

     பொருதச மர்த்தா குத்திர துரகமு கக்கோ தைக்கிடை

        புலவரில் நக்கீ ரர்க்குத                 வியவேளே

இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டருள்

        எழுபுவி துய்த்தார் மைத்துனர்          மதலாய்வென்

     றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை

        எழுதிவ னத்தே யெற்றிய               பெருமாளே

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/262279044&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.