பகுதி - 403
பிரணமந்திரத்தோடு பஞ்சாட்சரமாகிய ‘நமசிவாய’
பதச் சேதம் | சொற் பொருள் |
வேத வெற்பிலே புனத்தில் மேவி நிற்கும் அபிராம Advertisement
| வேதவெற்பு: வேதகிரி எனப்படும் திருக்கழுக்குன்றம்; புனத்தில்: தினைப்புனத்தில்; அபிராம: அழகு நிறைந்தவனே; |
வேடுவச்சி பாத பத்மம் மீது செச்சை முடிதோய
| வேடுவச்சி: வள்ளி; பாதபத்மம்: பாதத் தாமரை; செச்சை: வெட்சி, வெட்சி மாலை; |
ஆதரித்து வேளை புக்க ஆறு இரட்டி புய நேய
| ஆதரித்து: அன்புவைத்து; வேளை புக்க: சரியான வேளையில் புகுந்த; ஆறு இரட்டி புய(ம்): ஆறிரு தோள், பன்னிருதோள்; |
ஆதரத்தோடு ஆதரிக்க ஆன புத்தி புகல்வாயே
| ஆதரத்தோடு: அன்போடு; |
காதும் உக்ர வீர பத்ர காளி வெட்க மகுடம்
| காதும்: (பகைவர்களைக்) கொல்லும்; |
ஆகாசம் முட்ட வீசி விட்ட காலர் பத்தி இமையோரை
| பத்தி இமையோர்: பக்தியுள்ள தேவர்கள் (அல்லது) வரிசையான தேவர்கள்; |
ஓதுவித்த நாதர் கற்க ஓதுவித்த முநி நாண
| ஓதுவித்த: ஓதுவிக்கப்பட்ட; முனி: (ஓதுவிக்கப்பட்ட முனியாகிய பிரமன்)) |
ஓர் எழுத்தில் ஆறு எழுத்தை ஓதுவித்த பெருமாளே.
| ஆறு எழுத்தை ஓதுவித்த: பஞ்சாட்சரமாகிய நமசிவாய என்பதோடு ஓரெழுத்தாகிய ‘ஓம்’ சேரும் போது, அதுவே (சரவணபவ என்னும்) ஆறெழுத்தாக விரிகிறது என்பதை உரைத்த; |
வேத வெற்பிலே... வேதாசலம் அல்லது வேதகிரி எனப்படும் திருக்கழுக்குன்றத்திலும்;
புனத்தில் மேவி நிற்கும் அபிராம... வள்ளியம்மை காத்ததாகிய தினைப்புனத்திலும் சென்று நிற்கின்ற பேரழகனே!
வேடுவச்சி பாத பத்ம மீது செச்சை முடிதோய... வள்ளியம்மையுடைய பாதத் தாமரையின் மேலே வெட்சி மாலையை அணிந்த உன்னுடைய திருமுடி தோயும்படியாக (அவர்மீது)
ஆதரித்து வேளை புக்க ஆறிரட்டி புயநேய... அன்பு வைத்து, ஆட்கொள்ளும் வேளை இதுவே என்று உரிய நேரத்தில் தினைப் புனத்துக்குள் புகுந்தவனே! பன்னிரு தோள்களை உடையவனே! அன்பனே!
ஆதரத்தோடு ஆதரிக்க ஆன புத்தி புகல்வாயே... (நான் உன்மீது) அன்பு வைத்து, வழிபடும் நேயத்தோடு இருப்பதற்கு உரிய உபதேச மொழியைச் சொல்லி அருள வேண்டும்.
காதும் உக்ர வீர பத்ர காளி வெட்க... பகைவர்களைக் கொல்பவளும் கோபம் நிறைந்தவளும், வீரம் நிறைந்தவளுமான பத்ரகாளி வெட்கமடையுமாறு,
மகுடத்தை ஆகாச முட்ட வீசி விட்ட காலர்... தன்னுடைய மகுடத்தை வானத்தின் உச்சியிலே சென்று முட்டுமாறு நடனமாடிய கால்களை உடைய சிவனார்;
பத்தி இமையோரை ஓது வித்த நாதர் கற்க... வரிசையாக நிற்கும் தேவர்களுக்குக் கற்பித்த சிவனார் உன்னிடம் வந்து கற்கும்படியாகவும்;
ஓது வித்த முநிநாண... சிவனாரால் ஓதுவிக்கப்பட்ட முனியான பிரமன் நாணும்படியும்*;
(பிரணவத்தின் பொருளை அறியாத பிரமன், பரமசிவனாருக்குப் பிரணவத்தின் பொருளை நீ உபதேசிப்பதைப் பார்த்து வெட்கமடையும்படியாகவும்)
ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓது வித்த பெருமாளே... ஓரெழுத்தாகிய பிரணமந்திரத்தோடு பஞ்சாட்சரமாகிய ‘நமசிவாய’ என்பது சேரும்போது அதுவே ஆறெழுத்தாகவும்; சரவணபவ என்னும் ஆறெழுத்தாகவும் அதுவே இருக்கிறது என்றும் உபதேசித்து அருளிய பெருமாளே!
சுருக்க உரை
பகைவர்களைக் கொல்பவளும், உக்ர சொரூபியும் வீரம் நிறைந்தவளுமான பத்ரகாளி வெட்கமடையும்படியாக, தன்னுடைய மகுடம் (ஆடுகின்ற கால் பட்டு) ஆகாயத்தில் சென்று முட்டும்படியா ஆடுகின்ற பாதத்தை உடையவரும்; வரிசையாக நிற்கும் தேவர்களுக்குக் கற்பித்தவருமான சிவனாருக்கு அவராலே கற்பிக்கப்பட்டவரான (கற்பிக்கப்பட்டும் பிரணவத்தின் பொருளை அறியாத) பிரமன் வெட்கம் அடையும்படியாக, ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்தோடு ‘ஓம்’ என்னும் ஓரெழுத்து சேரும்போது அதுவே ஆறெழுத்தாகிய ‘சரவணபவ’ என்று விரிவடைகிறது என்று உபதேசித்து அருளிய பெருமாளே!
வேதகிரியாகிய திருக்கழுக்குன்றத்தையும் வள்ளி மலையிலுள்ள தினைப்புனத்தையும் நாடி வந்து வீற்றிருக்கும் அழகனே! வேடமகளான வள்ளியம்மையின் பாதகமலங்களில், வெட்சி மாலையை அணிந்த உன் திருமுடி தோயும்படியாக அவர்மீது அன்புவைத்து, அவரை ஆட்கொள்ளும் தருணம் இதுவே என்று அவரிருந்த தினைப்புனத்தை நாடிச் சென்ற பன்னிரு தோளனே! நேயனே! உன்மீது நான் அன்புகொண்டு, அந்த அன்பு மாறாமல் வழிபடுவதற்கு உரிய உபதேசமொழியை எனக்குச் சொல்லியருள வேண்டும்.