பகுதி - 408
இந்தப் பாடல் காஞ்சித் தலத்துக்கானது.
‘தூய்மையானதும் வீடு பேற்றைத் தரவல்லதுமான தமிழை—தமிழ்ப் பாக்களைப்—பாடும் பேற்றைப் பெறுவேனோ’ என்று வேண்டுகின்ற இந்தப் பாடல் காஞ்சித் தலத்துக்கானது. இதில் வலிய சூர சம்ஹாரம் விவரிக்கப்படுவதாலோ என்னவோ வல்லொற்றுகள் அதிகமாகப் பயில்கின்றன. வேகமான நடையுடன் கூடிய சந்தம் பின்னப்பட்டுள்ளது. இப்பாடலின் மூன்றாமடியில் ‘துருமத்(து) அடைவாகி’ என்ற பிரயோகம் இருப்பதைக் காணலாம். துருமம் என்றால் மரம் என்று பொருள். கல்பத்ருமா என்றால் கற்பக மரம். இங்கே மாமரத்தைக் குறிக்கிறது.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகள் உள்ள பாடல். ஒவ்வோரடியிலும் 1, 2, 4, 5, 7, 8 ஆகிய சீர்களின் இரண்டாம் எழுத்து வல்லொற்று; தொங்கல் சீர் நீங்கலாக மற்ற அத்தனை எழுத்துகளும் குறில்.
தத்தத் தத்தத் தனனத் தத்தத் தத்தத் தனனத்
தத்தத் தத்தத் தனனத் - தனதான
Advertisement
கொக்குக் கொக்கத் தலையிற் பற்றுச் சிக்கத் தளகக்
கொத்துற் றுக்குப் பிணியுற் - றவனாகிக்
குக்கிக் கக்கிக் கடையிற் பற்றத் துற்றுக் கழலக்
கொத்தைச் சொற்கற் றுலகிற் - பலபாஷை
திக்கித் திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபொய்ச்
செற்றைச் சட்டைக் குடிலைச் - சுமைபேணும்
சிக்கற் றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத்
திட்டத் துக்குப் புகலப் - பெறுவேனோ
அக்கிட் டிக்கிட் டமருக் கொட்டிக் கிட்டிட் டெதிரிட்
டத்ரத் தெற்றிக் கடுகப் - பொருசூரன்
அச்சுக் கெட்டுப் படைவிட் டச்சப் பட்டுக் கடலுட்
புக்குப் பட்டுத் துருமத் - தடைவாகத்
தக்குத் திக்குத் தறுகட் டொக்குத் தொக்குற் றதுகட்
கைக்கொட் டிட்டிட் டுடல்சிற் - கணமாடிச்
சத்திக் குத்தித் துடியிற் சத்திக் கக்கைச் சமர்செய்ச்
சத்திக் கச்சிக் குமரப் - பெருமாளே.