முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 378

இப்பாடல் திருவாவினன்குடித் தலத்துக்கானது.

Updated On : 14 அக்டோபர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:58 PM

இன்று சற்றே நீளமான சந்த அமைப்புள்ள பாடலைப் பார்க்கிறோம்.  இது சிவகிரி, சிவமலை என்றெல்லாம் பெயர்கொண்ட பழனி (திருவாவினன்குடித் தலத்துக்கானது.  இறையருளைக் கோருகிறது.

ஒற்று நீக்கி ஒரு மடக்குக்கு 16 எழுத்துகள் கொண்ட அமைப்பு மூன்று முறை மடங்கி, நான்கெழுத்துகளைக் கொண்ட தொங்கல் சீரோடு நின்று, இப்படி ஓரடிக்கு இரண்டு அடுக்குகள் உள்ளன.  ஆகவே அடிக்கு ஒற்று நீக்கி 104 எழுத்துகள்; முதல் மடக்கில் ஒற்று சேர்த்து ஒவ்வொரு இரண்டாம் எழுத்தும் மெல்லொற்று; அதைத் தொடர்வது நிரைநிரை என்ற அமைப்பைக் கொண்டதும், வேகமான ஓட்டத்தைக் கொண்டமான சந்தம்.  இவை அனைத்துமே குறில்.  தொங்கல் சீரில் மட்டுமே நெடில் பயிலக் காணலாம்.  விவரங்களைச் சொல்லும்போதே தலைசுற்ற வைக்கும்படியான சிக்கலான இந்த அமைப்பில், பல இடங்களில் சிலேடைப் பிரயோகங்கள்; பல புராணச் சம்பவங்கள்; எத்தனையோ கதைகள் அடங்கியுள்ளன என்பதுதான் மூச்சுமுட்டுகின்ற செய்தி. பாடலைப் பாருங்கள்; படிப்பதைக் கேளுங்கள்.

தந்தந் தந்தந் தந்தந் தந்தந்
         தனதன தனதன தனதன தனதன
      தந்தந் தந்தந் தந்தந் தந்தந்
         தனதன தனதன தனதன தனதன
      தந்தந் தந்தந் தந்தந் தந்தந்
         தனதன தனதன தனதன தனதன             தனதான

Advertisement

குன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும்
         படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர்
      இந்துஞ் சந்தந் தங்குந் தண்செங்
         கமலமு மெனவொளிர் தருமுக வநிதையர்
      கொஞ்சுங் கெஞ்சுங் செஞ்சும் வஞ்சஞ்
         சமரச முறவொரு தொழில்வினை புரிபவர்    விரகாலும்
      கும்பும் பம்புஞ் சொம்புந் தெம்புங்
         குடியென வளர்தரு கொடியவர் கடியவர்
      எங்கெங் கெம்பங் கென்றென் றென்றுந்
         தனதுரி மையதென நலமுட னணைபவர்
      கொஞ்சந் தங்கின் பந்தந் தெந்தன்
         பொருளுள தெவைகளு நயமொடு கவர்பவர்   மயலாலும்
என்றென் றுங்கன் றுந்துன் புங்கொண்
         டுனதிரு மலரடி பரவிட மனதினில்
      நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந்
         தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெற
      இன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந்
         தமுமிக வருள்பெற விடைதரு விதமுன      மருள்வாயே
      எங்குங் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன்
         அவன்விடு மதிசய வினையுறு மலகையை
      வென்றுங் கொன்றுந் துண்டந் துண்டஞ்
         செயுமரி யொருமுறை யிரணிய வலனுயிர்
      நுங்குஞ் சிங்கம் வங்கந் தன்கண்
         துயில்பவ னெகினனை யுதவிய கருமுகில் - மருகோனே
ஒன்றென் றென்றுந் துன்றுங் குன்றுந்
         தொளைபட மதகரி முகனுடல் நெரிபட
      டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண்
         டிடியென விழுமெழு படிகளு மதிர்பட
      ஒண்சங் கஞ்சஞ் சஞ்சஞ் சஞ்சென்
         றொலிசெய மகபதி துதிசெய அசுரரை - யடுவோனே
      உந்தன் தஞ்சந் தஞ்சந் தஞ்சஞ்
         சிவனருள் குருபர வெனமுநி வரர்பணி
      யுந்தொந் தந்தொந் தந்தொந் தந்தென்
         றொலிபட நடமிடு பரனரு ளறுமுக
      உண்கண் வண்டுங் கொண்டுங் தங்கும்
         விரைபடு குரவல ரலர்தரு மெழில்புனை - புயவீரா
அன்றென் றொன்றுங் கொண்டன் பின்றங்
         கடியவர் தமையிகழ் சமணர்கள் கழுவினில்
      அங்கஞ் சிந்தும் பங்கந் துஞ்சும்
         படியொரு தொகுதியி னுரைநதி யெதிர்பட
      அன்பின் பண்பெங் குங்கண் டென்பின்
         அரிவையை யெதிர்வர விடுகவி புகல்தரு- திறலோனே
      அண்டங் கண்டும் பண்டுண் டும்பொங்
         கமர்தனில் விஜயவ னிரதமை நடவிய
      துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன்
         தருமகன் முநிதழல் வருதக ரிவர்வல
      அங்கன் கஞ்சஞ் சங்கம் பொங்குங்
         கயநிறை வளமுறு சிவகிரி மருவிய  - பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.