பகுதி - 394
இச்சா சக்தியான வள்ளியம்மையோடும்
சிதம்பரத்துக்குத் தென்மேற்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், தற்போது ஸ்ரீமுஷ்ணம் என்று அழைக்கப்படும் திருமுட்டம் தலத்துக்கான பாடல் இது. பற்பலவிதமான முத்துமாலைகளை அணிந்து, இச்சா சக்தியான வள்ளியம்மையோடும் பக்தர்கூட்டத்தோடும் காட்சி தந்தருள வேண்டும் என்று கோருகின்ற பாடல்.
ஒற்றொழித்து அடிக்கு 22 எழுத்துகள்; 5, 11, 17 ஆகிய எழுத்துகள் நெடில், மற்றவை குறில்; ஒற்று சேர்த்து 4, 11, 18 ஆகியவை வல்லொற்றுகள். பாடலைப் பார்ப்போம்.
தனதத்த தான தனதத்த தான
தனதத்த தான தனதான
கழைமுத்து மாலை புயல்முத்து மாலை
கரிமுத்து மாலை மலைமேவுங்
கடிமுத்து மாலை வளைமுத்து மாலை
கடல்முத்து மாலை யரவீனும்
அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பி
னடைவொத்து லாவ அடியேன்முன்
அடர்பச்சை மாவி லருளிற்பெ ணோடு
மடிமைக்கு ழாமொ டருள்வாயே
மழையொத்த சோதி குயில்தத்தை போலு
மழலைச்சொ லாயி யெமையீனு
மதமத்த நீல களநித்த நாதர்
மகிழ்சத்தி யீனு முருகோனே
செழுமுத்து மார்பி னமுதத்தெய் வானை
திருமுத்தி மாதின் மணவாளா
சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான
திருமுட்ட மேவு பெருமாளே.
Advertisement