பகுதி - 466
இந்தப் பாடல் குன்று தோறாடலுக்கானது.
எளியதும் சிறியதுமான இந்தப் பாடல் குன்றுதோறாடலுக்கானது. குன்றுதோறாடலில் உள்ள ஐந்து பாடல்களில் மூன்றை இதற்கு முன்னால் பார்த்திருக்கிறோம். ‘என்னுடைய எல்லாத் துன்பங்களும் அற்றுப் போகவேண்டும்’ என்று இறைவனைக் கோருகிறது.
அடிக்கு ஒற்றொழித்து 24 எழுத்துகளைக் கொண்ட பாடல். (தொங்கல் சீர் நீங்கலாக)அனைத்தும் குற்றெழுத்துகள். முதல் சீரின் இறுதியான நான்காம் எழுத்தும், மூன்றாம் சீரின் இடையான இரண்டாமெழுத்தும் மெல்லொற்றுகள். எங்கேயும் வல்லொற்று பயிலவில்லை. பொதுவாக ‘தனனந் தனன தந்தத் தனதான’ என்று வல்லொற்றுடன் பயிலும் இடத்திலும் அது பயிலவில்லை என்பதைக் காணலாம். (க்ருபையாகி என்பதிலுள்ள க் என்ற எழுத்தும், விளையாடிப் என்பதிலுள்ள ப் என்ற எழுத்தும் தாளக் கணக்கில் அடங்காதவை.)
தனனந் தனன தந்த தனதான
தனனந் தனன தந்த தனதான
அதிருங் கழல்ப ணிந்து னடியேனுன்
அபயம் புகுவ தென்று நிலைகாண
இதயந் தனிலி ருந்து க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி நடமாடும்
இறைவன் தனது பங்கி லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த பெருமாளே.
Advertisement