பகுதி - 468
இந்தப் பாடல் திருச்செந்தூருக்கானது.
‘கீழான மூதேவியைப் போன்ற நானும் நலம் பெறுமாறு அருளவேண்டும்’ என்று கோருகின்ற இந்தப் பாடல் திருச்செந்தூருக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளை உடைய பாடல். முழுக்கவும் குறில் பயின்று வருகின்ற சந்தம். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஐந்தைந்து எழுத்துகள் இருக்கின்றன; 2, 3, 5, 6, 8, 9 ஆகிய சீர்களில் இரண்டாமெழுத்து மெல்லொற்றாக அமைந்திருக்கிறது.
தனனதன தந்த தந்தன தனனதன தந்த தந்தன
தனனதன தந்த தந்தன தனதான
இருகுழையெ றிந்த கெண்டைக ளொருகுமிழ டர்ந்து வந்திட
இணைசிலைநெ ரிந்தெ ழுந்திட அணைமீதே
இருளளக பந்தி வஞ்சியி லிருகலையு டன்கு லைந்திட
இதழமுத ருந்து சிங்கியின் மனமாய
முருகொடுக லந்த சந்தன அளறுபடு குங்கு மங்கமழ்
முலைமுகடு கொண்டெ ழுந்தொறு முருகார
முழுமதிபு ரிந்த சிந்துர அரிவையரு டன்க லந்திடு
முகடியுந லம்பி றந்திட அருள்வாயே
எரிவிடநி மிர்ந்த குஞ்சியி னிலவொடுமெ ழுந்த கங்கையு
மிதழியொட ணிந்த சங்கரர் களிகூரும்
இமவரைத ருங்க ருங்குயில் மரகதநி றந்த ருங்கிளி
யெனதுயிரெ னுந்த்ரி யம்பகி பெருவாழ்வே
அரைவடம லம்பு கிண்கிணி பரிபுரநெ ருங்கு தண்டைக
ளணிமணிச தங்கை கொஞ்சிட மயில்மேலே
அகமகிழ்வு கொண்டு சந்ததம் வருகுமர முன்றி லின்புறம்
அலைபொருத செந்தில் தங்கிய பெருமாளே.
Advertisement