பகுதி - 576
இப்பாடல் மதுரைக்கானது.
‘செந்தமிழாலே உன்னைப் பாடி, அந்தப் பாடல்களைப் பாடும் அன்பர்கள் மகிழ்ந்திடுமாறு வரமருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் மதுரைக்கானது.
அழகான தாள அமைப்பு. அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளை உடைய பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளை உடையவை; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் ஒரு மெல்லின ஒற்று இடைப்படும் நான்கு குற்றெழுத்துகளைக் கொண்டவை. அத்தனை எழுத்துகளும் குறிலாகப் பயிலும் குறுவண்ணம் என்ற அமைப்பு.
தனன தனந்தன தனன தனந்தன
தனன தனந்தன தனதான
பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி யதனாலே
பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது நிலவாலே
வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
வரிசை தரும்பத மதுபாடி
வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
மகிழ வரங்களு மருள்வாயே
அரஹர சுந்தர அறுமுக என்றுனி
அடியர் பணிந்தடி மகிழ்வோனே
அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
குறமக ளிங்கித மணவாளா
கருதரு திண்புய சரவண குங்கும
களபம ணிந்திடு மணிமார்பா
கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் பெருமாளே.
Advertisement