பகுதி - 580
இப்பாடல் வயலூருக்கானது
ஒரே முகத்துடன் இறைவன் தனக்குக் கனவிலே காட்சி கொடுத்ததை வருணித்து ‘அப்படிப்பட்ட உன் திருவுருவத்தை ஒருபோதும் மறவேன்’ என்று பாடும் இப்பாடல் வயலூருக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளைக் கொண்டவை; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்கள் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளைக் கொண்டவை; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்கள் இரண்டு நெடிலும் ஒரு குறிலுமாக மூன்றெழுத்துகளைக் கொண்டவை.
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான தனதான
திருவு ரூப நேராக அழக தான மாமாய
திமிர மோக மானார்கள் கலைமூடுஞ்
சிகரி யூடு தேமாலை யடவி யூடு போயாவி
செருகு மால னாசார வினையேனைக்
கருவி ழாது சீரோதி யடிமை பூண லாமாறு
கனவி லாள்சு வாமீநின் மயில்வாழ்வுங்
கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாத
கழலு நீப வேல்வாகு மறவேனே
சருவ தேவ தேவாதி நமசி வாய நாமாதி
சயில நாரி பாகாதி புதல்வோனே
சதம கீவல் போர்மேவு குலிச பாணி மால்யானை
சகச மான சாரீசெ யிளையோனே
மருவு லோக மீரேழு மளவி டாவொ ணாவான
வரையில் வீசு தாள்மாயன் மருகோனே
மநுநி யாய சோணாடு தலைமை யாக வேமேலை
வயலி மீது வாழ்தேவர் பெருமாளே.
Advertisement