முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 500

முருகனுக்கு உகந்த 29 தலங்களின்

Updated On : 10 மார்ச், 2017 at 6:27 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:41 PM

இப்பாடல் க்ஷேத்திரக்கோவை என்று வழங்கப்படுவது.  முருகனுக்கு உகந்த 29 தலங்களின் பெயரைத் தொகுத்து இந்தப் பாடலில் சொல்லியிருக்கிறார்.  சிக்கலான சந்த அமைப்பைக் கொண்ட திருப்புகழில், சந்த ஓட்டத்துக்குப் பொருந்த ஒன்றிரண்டு, மூன்று நான்கு தலங்களின் பெயரைச் சொல்வதே சவால் எனும்போது, மிக அருமையான தாளக்கட்டுத் தவறாமல், எழுத்துக் கணக்கும் மிகச்சரியாக இடம்மாறாமல் நிற்க வேண்டிய ஒற்றெழுத்துகளும் பிசகாமல் இத்தனைத் தலங்களின் பெயரையும் வரிசையிட்டுச் சொல்வதும் அசாத்தியமான வேலைப்பாடு.  இப்படிப் பாடுவது அருட்கவிகளுக்கே சாத்தியம்.  முருகனையே தன் குருநாதனாகக் கொண்ட நம் குருநாதருக்கு முடியாதது என்றொன்றும் உண்டோ!

பாடலின் அமைப்பைப் பார்ப்போம்.  ஒவ்வோரடிக்கும் ஒற்றுநீக்கி 37 எழுத்துகள்; 1, 5, 9 ஆகிய சீர்கள் ஒற்றொழித்து இரண்டெழுத்தையும்; இரண்டவதாக வரும் (கணக்கில் சேராத) எழுத்து மெல்லொற்றாகவும்; 2, 6, 10 ஆகிய சீர்கள் நெடிலோடு தொடங்கும் மூன்றெழுத்துகளாகவும்; 3, 7, 11 ஆகிய சீர்கள் முதலிரு எழுத்தும் நெடிலாகவும் மூன்றாவது எழுத்து குறிலாகவும் உள்ள மூன்றெழுத்துகளாகவும்; 4, 8, 12 ஆகிய சீர்கள் ஒற்றொழித்து மூன்றெழுத்தும்; இடையில் கணக்கில் சேராத மெல்லொற்று இரண்டாமெழுத்தாகவும் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.  இத்தனைக் கடினமான அமைப்பில் 29 தலங்களின் பெயர்களை வரிசைப்படுத்துவது மிகப்பெரிய சவால்.  இறையருள் பெற்று கவிபாடுபவர்களுக்கு இயலாதது என்று ஒன்றுமே இல்லை என்பதை இந்த அசாத்தியமான வேலைப்பாட்டால் குருநாதர் உணர்த்துகிறார்.

தந்த தானன தானான தந்தன
                தந்த தானன தானான தந்தன
                        தந்த தானன தானான தந்தன                                 தனதான

கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
                        உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
                        கொன்றை வேணியர் மாயூர மம்பெறு           சிவகாசி
                கொந்து லாவிய ராமேசு ரந்தனி
                        வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
                        கும்பு கூடிய வேளூர் பரங்கிரி                                 தனில்வாழ்வே
செம்பு கேசுர மாடானை யின்புறு
                        செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி
                        தென்றன் மாகிரி நாடாள வந்தவ                        செகநாதஞ்
                செஞ்சொ லேரக மாவா வினன்குடி
                        குன்று தோறுடன் மூதூர்வி ரிஞ்சைநல்
                        செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் வருதேவே
கம்பை மாவடி மீதேய சுந்தர
                        கம்பு லாவிய காவேரி சங்கமு
                        கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர                         வயலூரா
                கந்த மேவிய போரூர்ந டம்புரி
                        தென்சி வாயமு மேயாய கம்படு
                        கண்டி யூர்வரு சாமீக டம்பணி                               மணிமார்பா
எம்பி ரானொடு வாதாடு மங்கையர்
                        உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி
                        எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு                    துதியோதும்
                இந்தி ராணிதன் மாதோடு நன்குற
                        மங்கை மானையு மாலாய்ம ணந்துல
                        கெங்கு மேவிய தேவால யந்தொறு                  பெருமாளே.

 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.