பகுதி - 502
பாடல் வைத்தீசுரன் கோவிலுக்கானது
உன்னுடைய ஞானமயமான திருவடியைத் தந்தருளவேண்டும் என்று கோருகிற இந்தப் பாடல் வைத்தீசுரன் கோவிலுக்கானது. வைத்தீசுரன் கோவிலுக்கு வேளூர் என்றும் புள்ளிருக்கு வேளூர் என்றும் பெயர்களுண்டு. இந்தப் பாடலில் வேளூர் என்று குறிப்பிடப்படுகிறது.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒற்று நீக்கி மூன்று எழுத்துகள்; கணக்கில் சேராத இரண்டாம் எழுத்து வல்லொற்று; இரண்டு, நான்கு ஆறு ஆகிய சீர்கள் நான்கெழுத்துகளைக் கொண்டவை; இவற்றின் முதலெழுத்தும் மூன்றாமெழுத்தும் நெடில்.
தத்தன தானதான தத்தன தானதான
தத்தன தானதான தனதான
எத்தனை கோடிகோடி விட்டுட லோடியாடி
யெத்தனை கோடிபோன தளவேதோ
இப்படி மோகபோக மிப்படி யாகியாகி
யிப்படி யாவதேது இனிமேலோ
சித்திடில் சீசிசீசி குத்திர மாயமாயை
சிக்கினி லாயுமாயு மடியேனைச்
சித்தினி லாடலோடு முத்தமிழ் வாணரோது
சித்திர ஞானபாத மருள்வாயே
நித்தமு மோதுவார்கள் சித்தமெ வீடதாக
நிர்த்தம தாடுமாறு முகவோனே
நிட்கள ரூபர்பாதி பச்சுரு வானமூணு
நெட்டிலை சூலபாணி யருள்பாலா
பைத்தலை நீடுமாயி ரத்தலை மீதுபீறு
பத்திர பாதநீல மயில்வீரா
பச்சிள பூகபாளை செய்க்கயல் தாவுவேளூர்
பற்றிய மூவர்தேவர் பெருமாளே.
Advertisement