பகுதி - 806
உன் மார்பிலே அணிந்திருக்கும்...
‘உன் மார்பிலே அணிந்திருக்கும் மாலையைத் தந்தருள்வாயாக’ என்று இறைவனை நாயகி பாவத்திலே வேண்டும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது. பொதுவாக குருநாதரின் அகத்துறைப் பாடல்களில் பெரும்பான்மையும் ‘நற்றாயிரங்கல்’ துறையில், ‘உன்மீது மோகம் கொண்ட என் மகளை ஆண்டருள்வாயாக’ என்று கேட்பதாக அமைந்திருக்கும். இந்தப் பாடல், தன்னையே நாயகியாகப் பாவித்து, ‘உன் மார்பிலே அணியும் மாலையைத் தந்தருள்வாயக’ என்று கேட்கும் அரிய வகையைச் சேர்ந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று, ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.
Advertisement
தானந்த தானத்தந் தனதானா
நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே
நானென்று மார்தட்டும் பெருமாளே.