முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 867

பழிப்பர் வாழ்த்துவர்..

Updated On : 29 ஜூன், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:34 PM

பதச் சேதம்

சொற் பொருள்

பழிப்பர் வாழ்த்துவர்சிலசில பெயர்தமை ஒருத்தர் வாய் சுருள்ஒருவர் கை உதவுவர் பணத்தை நோக்குவர்பிணமது தழுவுவர்
அளவளப் பதனாலே

Advertisement

 

ஒருத்தர் வாய்ச் சுருள்: ஒருவர் வாயிலே இருக்கிற வெற்றிலைச் சுருளை; ஒருவர் கை உதவுவர்: மற்றொருவரின் கையிலே கொடுப்பார்கள்;

படுக்கை வீட்டினுள்அவுஷதம் உதவுவர் அணைப்பர் கார்த்திகைவருது என உறு பொருள் பறிப்பர் மாத்தையில்ஒருவிசை வருக என
அவரவர்க்கு உறவாயே

 

அவுஷதம் உதவுவர்: மருந்து இடுவார்கள்; மாத்தையில்: மாதத்தில்; ஒருவிசை வருக: ஒருமுறையேனும் வரவேண்டும்;

அழைப்பர் ஆத்திகள்கருதவர் ஒருவரை முடுக்கி ஓட்டுவர்அழிகுடி அரிவையர் அலட்டினால் பிணைஎருது என மயல் 
எனும்நரகினில் சுழல்வேனோ

 

ஆத்திகள்: ஆஸ்திகள்; கருதவர்: கருது(ம்) அவர்; முடுக்கி ஓட்டுவர்: அவசரமாய் விரட்டுவார்கள்; அழிகுடி அரிவையை: குடியை அழிக்கும் பெண்கள்; அலட்டினால்: உபத்திரவத்தால்; பிணை எருதென: கட்டப்பட்ட எருதைப்போல;

அவத்தமாய் சில படுகுழி தனில் விழும் விபத்தை நீக்கி உன்அடியவர் உடன் எனை அமர்த்தி ஆட் கொளமனதினில் அருள்செய்து 
கதி தனைதருவாயே

 

அவத்தமாய்: பயனற்றதாய்;

தழைத்த சாத்திர மறைபொருள் அறிவு உள குருக்கள் போல் சிவநெறி தனைஅடைவொடு தகப்பனார்க்கு ஒருசெவி தனில் உரைசெய்த 
முருக வித்தகவேளே

 

அடைவொடு: முறைப்படி;

சமத்தினால் புகழ்சனகியை நலிவு செய் திருட்டு ராக்கதன் உடல்அது துணி செய்து சயத்த அயோத்தியில்வருபவன் அரி 
திருமருமக பரிவோனே

 

சமத்தினால்: சாமர்த்தியத்தால்; சனகி: ஜானகி; திருட்டு ராக்கதன்: ராவணன்;

செழித்த வேல் தனைஅசுரர்கள் உடல் அது பிளக்க ஓச்சிய பிறகுஅமரர்கள் பதி செலுத்திஈட்டிய சுர பதி மகள்தனை மணம் 
அதுஉற்றிடுவோனே

 

ஓச்சிய: வீசிய; அமரர்கள் பதி: தேவலாகம்; செலுத்தி: (தேவலோகத்துக்கு மீண்டும்) அனுப்பி; ஈட்டிய: ஈண்டிய, நெருங்கி நின்ற; சுரபதி: இந்திரன்; சுரபதி மகள்: தேவானை;

திறத்தினால் பலசமணரை எதிர் எதிர் கழுக்கள் ஏற்றியபுதுமையை இனிதொடு திருத்தமாய் புகழ்மதுரையில் உறை தரும்
அறுமுக பெருமாளே.

 

 

பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை... (பொருள் கொடுக்காத சிலரைப்) பழிப்பார்கள்; (கொடுத்தவர்களை) வாழ்த்துவார்கள்;

ஒருத்தர் வாய்ச்சுருள் ஒருவர் கை உதவுவர் பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர்... ஒருவருடைய வாயிலிருக்கிற வெற்றிலைச் சுருளை எடுத்து இன்னொருவரின் கையிலே கொடுப்பார்கள்; பணத்தின் மீதே குறியாக இருப்பார்கள்; (பணம் கிடைத்தால்) பிணத்தையும் தழுவுவார்கள்;

அளவளப் பதனாலே படுக்கை வீட்டினுள் அவுஷதம் உதவுவர் அணைப்பர்... பேசிக்கொண்டிருக்கும்போதே படுக்கை அறைக்குள் அழைத்துச் சென்று மருந்திடுவார்கள்; தழுவுவார்கள்;

கார்த்திகை வருது என உறு பொருள் பறிப்பர் மாத்தையில் ஒருவிசை வருக என அவரவர்க்கு உறவாயே அழைப்பர்... கார்த்திகைப் பண்டிகை வருகிறது (செலவுக்கு வேண்டும்) என்று கையிலுள்ள பொருளைப் பறிப்பார்கள்; மாதத்துக்கு ஒருமுறையேனும் இங்கு வரவேண்டும் என்று வந்திருக்கும் ஒவ்வொருவருடனும் சொந்தம் கொண்டாடி அழைப்பார்கள்;

ஆஸ்திகள் கருதுவர் ஒருவரை முடுக்கி ஓட்டுவர்... வந்திருப்பவருடைய சொத்துகளைப் பறிக்கக் கருதுவார்கள்; (பொருள் தராதவரை) அவசரப்படுத்தி விரட்டியடிப்பார்கள்;

அழிகுடி அரிவையர் அலட்டினால் பிணை எருது என மயல் எனும் நரகினில் சுழல்வேனோ... (இப்படியெல்லாம்) குடியை அழிக்கின்ற பொதுப்பெண்களுடைய உபத்திரவங்களாலே, கட்டப்பட்ட மாட்டைப்போல மையல் என்னும் நரகத்திலே நான் திரிந்துகொண்டிருப்பேனோ?

அவத்தமாய்ச் சில படு குழி தனில் விழும் விபத்தை நீக்கி... பயனில்லாத பெருங்குழியிலே நான் விழுகின்ற விபத்திலிருந்து என்னை விடுவித்து,

உன் அடியவர் உடன் எனை அமர்த்தி ஆட் கொள மனதினில் அருள் செய்து கதி தனைத் தருவாயே... உன் அடியார் திருக்கூட்டத்தோடு என்னைச் சேர்த்து ஆட்கொள்ளும்படியாக உன் மனத்தில் திருவருளைச் செய்து அடியேனுக்கு நற்கதியைத் தந்தருள வேண்டும்.

தழைத்த சாத்திர மறை பொருள் அறிவு உள குருக்கள் போல் சிவ நெறி தனை... செழிப்பாக நிற்கின்ற சாத்திரங்களின் மறைபொருளாக விளங்குவனவற்றை அறிந்த ஞானகுருக்களைப்போல சிவநெறிகளை,

அடைவொடு தகப்பனார்க்கு ஒரு செவி தனில் உரை செய்த முருக வித்தக வேளே... முறை தவறாமல் தந்தையாகிய சிவனாருடைய திருச்செவியிலே உபதேசித்த முருகா! வித்தகனே! வேளே!

சமத்தினால் புகழ் சனகியை நலிவு செய் திருட்டு ராக்கதன் உடல் அது துணி செய்து... புகழ்பெற்றவரான ஜானகியைத் தன் சாமர்த்தியத்தால் துன்பத்துக்கு ஆளாக்கிய திருட்டு அரக்கனான ராவணனுடைய உடலைத் துண்டாக்கி,

சயத்து அயோத்தியில் வருபவன் அரி திரு மருமகப் பரிவோனே...வெற்றிகொண்டு, அயோத்திக்குத் திரும்பிய ராமனாகிய திருமாலின் மருமகனே! அன்பு நிறைந்தவனே!

செழித்த வேல் தனை அசுரர்கள் உடல் அது பிளக்க ஓச்சிய பிறகு அமரர்கள் பதி செலுத்தி... செழித்திருக்கின்ற வேலை அசுரர்களுடைய உடலைப் பிளக்குமாறு செலுத்திய பின்னர், தேவர்களை அமரலோகத்துக்குத் திரும்பச் செய்து,

ஈட்டிய சுர பதி மகள் தனை மணம் அது உற்றிடுவோனே... நெருங்கி நின்றவளும், தேவர் தலைவனான இந்திரனுடைய மகளுமான தேவானை மணமுடித்தவனே!

திறத்தினால் பல சமணரை எதிர் எதிர் கழுக்கள் ஏற்றிய புதுமையை இனிதொடு திருத்தமாய்ப் புகழ் மதுரையில் உறை தரும் அறுமுகப்பெருமாளே.... (திருஞான சம்பந்தராக அவதரித்து) சமணர்களோடு வாதிட்ட திறத்தினால் அவர்களை எதிரெதிரே கழுவில் ஏற்றிய அற்புதத்தை இனிதே நிகழ்த்தி; புகழ்பெற்ற மதுரையில் திருத்தமாக வீற்றிருக்கின்ற ஆறுமுகப் பெருமாளே!

 சுருக்க உரை

வேதங்களின் மறைபொருளாக விளங்கும் தத்துவங்களை சிவபெருமானின் திருச்செவியில் குருநாதனாக நின்று ஓதியவனே! ஞானியே! செவ்வேளே! புகழ்பெற்ற ஜானகியைச் சிறையடைத்துத் துன்புறுத்திய திருட்டு அரக்கனான ராவணனுடைய உடலைப் பிளந்து வெற்றிகொண்டு அயோத்திக்குத் திரும்பிய ராமனாக அவதரித்த திருமாலின் மருகனே!  வேலை எறிந்து அரக்கர்களுடைய உடலைப் பிளந்தவனே! தேவர்களை அமராவதிக்குத் திரும்பச் செய்து, அதன்பின்னர் நெருங்கி நின்றவளும், இந்திரனுடைய மகளுமான தேவானையை மணமுடித்தவனே!  திருஞான சம்பந்தராக அவதரித்துச் சமணர்களோடு வாதிட்டு அவர்களைக் கழுவேற்றி அற்புதத்தை நிகழ்த்தியவனே! புகழ்பெற்ற மதுரையில் திருத்தமாக வீற்றிருக்கின்ற பெருமாளே!

பொதுப்பெண்டிர் பொருள் தராதவர்களைப் பழிப்பார்கள். தந்தவர்களை வாழ்த்துவார்கள். ஒருவருடைய வாயிலிருக்கும் வெற்றிலைச் சுருளை எடுத்து இன்னொருவர் கையிலே கொடுப்பார்கள். பணமே குறியாக இருப்பார்கள். பேசிக்கொண்டிருக்கும் போதே படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று மருந்து கொடுப்பார்கள். சொந்தம் கொண்டாடியபடி, ‘மாதத்துக்கு ஒருமுறையேனும் இங்க வரவேண்டும்’ என்று உரிமையாகச் சொன்னபடி அவர்களுடைய சொத்தை அபகரிப்பார்கள்.  பொருள் கொடாதவர்களை அவசரமாக விரட்டியடிப்பார்கள். இப்படியெல்லாம் குடியை அழிக்கின்றவர்களுடைய உபத்திரவங்களால், கட்டப்பட்ட எருதைப் போல மையல் என்னும் நரகத்தில் அடியேன் கிடந்து உழலலாமா?  இப்படிப்பட்ட பயனற்ற படுகுழியில் விழுகின்ற விபத்திலிருந்த அடியேனை மீட்டு, உன்னுடைய அடியார் திருக்கூட்டத்தோடு சேர்க்க உனது திருவுள்ளத்தால் கருதி, அடியேனுக்கு நற்கதியைத் தரவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.