முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 925

அருத்தி வாழ்வொடு தனகிய..

Updated On : 7 அக்டோபர், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:29 PM

பதச் சேதம்

சொற் பொருள்

அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியும் உறவோரும்

Advertisement

 

அருத்தி: ஆசை; தனகிய: சிணுங்குகிற—கொஞ்சிப் பேசும்;

அடுத்த பேர்களும் இதம் உறு மகவொடு வளநாடும்

 

 

தரித்த ஊரும் மெய் என மனம் நினையாது உன் தனை

 

 

பராவியும் வழிபடு தொழிலது தருவாயே

 

பராவியும்: போற்றியும்;

எருத்தில் ஏறிய இறையவர் செவி புக

 

எருத்தில்: எருதில் (வலித்தல் விகாரம்)—இடபத்தில்;

இசைத்த நாவின இதண் உறு குற மகள் இரு பாதம்

 

இதண்: பரண்;

பரித்த சேகர மகபதி தர வரு(ம்) தெய்வ யானை

 

பரித்த: தாங்குகின்ற; சேகர: திருமுடியை உடையவனே; மகபதி: இந்திரன்;

பதி கொள் ஆறிரு புய பழநியில் உறை பெருமாளே.

 

பதிகொள்: பதியாகக் கொண்ட;

அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியும் உறவோரும்... ஆசையைப் பெருக்குகின்ற இந்த வாழ்வில் கொஞ்சிப் பேசும் மனைவியும் உறவினர்களும்,

அடுத்த பேர்களும் இதமுறு மகவோடு வளநாடும்... நண்பர்களும் இதத்தைத் தருகின்ற மக்கறும் வாழ்கின்ற செழிப்பான நாடும்,

தரித்த வூரும் மெய் எனமன நினைவது நினையாது...வாழ்ந்திருக்கின்ற ஊரும் நிலையானவை என்று மனம் கருதுகின்ற நினைப்பை ஒழித்து,

உன் த(ன்)னைப் பராவியும் . வழிபடு தொழிலது தருவாயே .. உன்னைப் போற்றுவதையும் வழிபடுவதையுமே செயலாகக் கொண்ட நிலையைத் தந்தருள வேண்டும்.

எருத்தி லேறிய இறையவர் செவிபுக வுபதேசம்... நந்தியை வாகனமாகக் கொண்ட சிவபெருமானுடைய செவியில் புகும்படியாக பிரணவத்தின் பொருளை உபதேசமாக,

இசைத்த நாவின இதணுறு குறமகள் இருபாதம்... உரைத்தருளிய நாவை உடைவனே!  (தினைப்புனத்தில்) பரணில் இருந்த வள்ளியின் இரண்டு பாதங்களையும்,

பரித்த சேகர மகபதி தரவரு தெய்வயானை... சுமக்கின்ற திருமுடியை உடையவனே! இந்திரனுடைய மகளான தெய்வயானை,

பதிக்கொள் ஆறிரு புய பழநியிலுறை பெருமாளே.... கணவனாகக் கொண்ட பன்னிரு புயத்தோனே! பழநியில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

ரிஷபத்தில் ஏறிவருகின்ற சிவபெருமானுடைய திருச்செவியில் பிரவத்தின் பொருளை உபதேசமாக உரைத்தருளிய நாவினனே!  தினைப்புனத்தில் பரணில் இருந்தபடி காவல் காத்த வள்ளியின் திருப்பாதங்களைச் சுமக்கின்ற திருமுடியை உடையவனே!  இந்திரன் மகளான தேவசேனையின் கணவனே! பழநியில் வீற்றிருக்கும் பெருமாளே!

ஆசைப் பெருக்கத்தைத் தருகின்ற இந்த வாழ்வும்; கொஞ்சிப் பேசம் மனைவியும் உறவினர்களும் நண்பர்களும் குழந்தைகளும் வாழும் நாடும் ஊரும் நிலையானவை என்று நினைத்து மயங்கி அழியாமல், உன்னைப் போற்றி வழிபடுவதையே பணியாகக் கொண்டிருக்கும்படி அருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.