தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அங்கீகாரம் பெறாத மழலையர் பள்ளிகளை கட்டுப்படுத்துவதில் அரசு அதிகாரிகளிடையே குழப்பம் நிலவுகிறது. இதனால் ஆண்டுதோறும் அனுமதி பெறாத நர்சரி, பிரைமரி பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இதுபோன்ற தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இப்போது 5,534 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தபோதும், உண்மை நிலவரம் இதைக் காட்டிலும் மிக அதிகம் என்பதை அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்.
பள்ளி முன்பருவ வகுப்புகள் தேவையா என்பதே சர்ச்சையில் இருக்கும் நிலையில், அதை ஆதரிக்கும் வகையில் மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரத்தையும் அரசு வழங்கி வருகிறது. ஆனால் மழலையர் பள்ளிகளைக் கண்காணித்து நிர்வாகம் செய்ய மாநில அளவில் தனியாக துறையோ, அலுவலர்களோ இல்லை.
தமிழகத்தில் தொடங்கப்படும் மழலையர் பள்ளிகள் யாவும் மற்ற மெட்ரிக், தனியார் பள்ளிகளைப் போலவே விதிகளுக்கு புறம்பாகவே தொடங்கப்படுகின்றன. ஒரு மாணவனுக்கு 10 சதுர அடி பரப்பளவு வீதம் கட்டடம், பனை, தென்னை கூரை இல்லாத பள்ளி, பள்ளி வளாகத்திலேயே விளையாட்டு மைதானம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். ஆனால் எதுவுமே அங்கு இருப்பதில்லை.
தொடக்கக் கல்வித்துறை வேலைகளே அதிகளவில் இருக்கும் நிலையில் வீதிக்கு வீதி தோன்றியுள்ள நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்துவது இயலாத காரியம் என்பது தொடக்கக் கல்வி அதிகாரிகளின் கருத்து. சரி விதிகள்படிதான் இயங்கவில்லை என்றாலும் அங்கீகாரத்தையாவது ஆண்டுக்கு ரூ.1,250 கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள முன் வருகிறார்களா என்றால் அதுவும் இல்லை. இப்போதைய நிலவரப்படி மூன்றில் ஒரு பங்கு பள்ளிகள்தான் 2010-ம் ஆண்டில் அங்கீகாரத்தை புதுப்பித்துள்ளன.
அங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளிகள் உடனடியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2009 அக்டோபரில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு முதல் முறையாக கடிதம் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்ட விரோதமாக இயங்கி வரும் பள்ளிகளை நிர்வாகமே மூடிவிட வேண்டும் என்று 2009 டிசம்பர் மாதம் இரண்டாவது முறையாக அரசு எச்சரித்தது. இதற்கும் எந்தப் பள்ளிகளும் செவிமடுக்காத நிலையில் சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் மழலையர் பள்ளிகளை நேரடி ஆய்வு செய்து அவற்றுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால் அரசோ, போலீúஸô இதுவரை எந்த பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. சில மாவட்டங்களில் எந்தெந்த இடத்தில், யாரால் மழலையர் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன என்ற விவரங்களே கல்வி அதிகாரிகளுக்கு தெரியவில்லை. இதனால் முதல் கட்டமாக, முதல் முறையே அங்கீகாரம் பெறாத பள்ளிகள், அங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளிகளின் பட்டியலை தொடக்கக் கல்வி அலுவலர்கள் இப்போது சேகரித்து வருகின்றனர்.
தொடக்கக் கல்வி அலுவலர்களின் எச்சரிக்கைகளையோ, நோட்டீஸ்களையோ மழலையர் பள்ளி நிர்வாகிகள் கண்டு கொள்வதே இல்லை. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர், மாவட்ட எஸ்.பி.களிடம் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை. பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதிலேயே இத்தனை குழப்பங்கள்.
இந்த சூழ்நிலையில் கும்பகோணம் சம்பவத்தைக் காட்டிலும் மிகப் பெரிய சம்பவம் நிகழ்ந்தால்தான் மழலையர் பள்ளிகள் முறைப்படுத்தப்படுமா என்ற கேள்வி கல்வியாளர்களிடம் எழுந்துள்ளது நியாயமானதுதானே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.