தொடரும்
(நாடக விமர்சனம்) பிரயத்தனா நாடகக் குழுவுக்கு நாடகத்தின் தரம் பற்றிய அக்கறை மட்டுமல்ல, புதுமையைப் புகுத்த வேண்டும் என்ற ஆர்வமும் உண்டு. விவேக்சங்கர், வசனத்தில் மட்டுமல்லாமல், மேடை அமைப்பிலும் புதிதாக ஏ
(நாடக விமர்சனம்)
பிரயத்தனா நாடகக் குழுவுக்கு நாடகத்தின் தரம் பற்றிய அக்கறை மட்டுமல்ல, புதுமையைப் புகுத்த வேண்டும் என்ற ஆர்வமும் உண்டு. விவேக்சங்கர், வசனத்தில் மட்டுமல்லாமல், மேடை அமைப்பிலும் புதிதாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று துடியாக இருப்பவர். "சிரத்தா' அமைப்பு தோன்றுவதற்கும், மேடையில் புதுமையைப் புகுத்துவதற்கும் சென்ற ஆண்டு தன் "தனுஷ்கோடி' நாடகம் மூலம் பிள்ளையார் சுழி போட்டவர் விவேக்சங்கர்.
விவேக்சங்கரின் "தொடரும்' ஒரு பயமுறுத்தலான மேடை நாடகம். "ஹாரர் ஸ்டோரி' என்கிறார் விவேக்சங்கர். ரசிகர்கள் பல இடங்களில் பயந்துபோய்க் கைதட்டுகிறார்கள். அதற்குக் காரணம் அவ்வளவு தத்ரூபமான நடிப்பு. வெற்றிகரமான சினிமா இயக்குநராக வரும் அப்சார், வேறு ஒருவருடைய திரைக்கதை-வசனத்தைத் தன்னுடையதாக்கிக்கொள்ள, திரைப்படம் வெளியாகி சக்கைப்போடு போடுகிறது. அதை எழுதியவர் மறைந்துவிட, அப்சாருக்குச் சவால் விடுகிற மாதிரி, தொடருகிறது நாடகம். அவருடைய உதவியாளர்களே அவரைத் தோலுரித்துக் காட்டிவிட முயலும் நிகழ்ச்சிகள்தாம் நாடகத்தின் பயங்கரக் காட்சிகளுக்குக் காரணமாக இருக்கின்றன.
அப்சாரைப் புதிய படத்துக்கான டிஸ்கஷனுக்காக, ஒரு மலைப் பிரதேச வீட்டுக்குக் கூட்டிகொண்டு வருகிறார்கள் அவருடைய உதவியாளர்கள். இங்கேதான் செட்டுக்கு முதலில் அப்ளாஸ் விழுகிறது. அப்புறம்தான் அப்சாருக்கு விழுகிறது அப்ளாஸ். இரவில் பயமுறுத்தல்களுக்கு எஃபெக்ட் அதிகம். எனவே விளக்கொளியும், வெளிச்சமும் குறைவாக இருக்கையில் பயமுறுத்தலின் தீவிரம் ரசிகர்களைத் தொடத்தான் செய்கிறது. அதுதான் நாடகத்தின் வெற்றி. அடுத்தவன் சொத்தை அனுபவிக்க ஆசைப்படாதே என்பதைத்தான் விவேக்சங்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அப்சாரை பயப்பட வைக்கிற அளவுக்கு அவருடைய உதவியாளர்கள் நடிக்கிற நடிப்புகூட மிகையாகத் தெரியவில்லை.
திரைத்துறையில் இதெல்லாம் சகஜமாக இருக்குமா என்று தெரியாது. ஆனால் விவேக்சங்கருக்கு ஒரு "ஹாரர் நாடகம்' எழுதி அவர்களை எச்சரிக்கை செய்ய இந்த சப்ஜெக்ட் வசதியாக இருக்கிறது!