முகப்பு
கவிதைமணி

வானமழை நீ யெனக்கு: தாமோதரன் கபாலி

Updated On : 31 ஆகஸ்ட், 2016 at 4:52 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM

வானமழை நீயெ னக்கு! வனமழகே நீயெ னக்கு!
கனமழை நீயெ னக்கு! கவியழகே நீயெ னக்கு!
தானமழை நீயெ னக்கு! தனமழகே நீயெ னக்கு!
ஞானமழை நீயெ னக்கு! நாநவிலும் நீயெ னக்கே!
 
வானமழை வளமே வாழி! வழங்கிட்ட வாழ்வே வாழி!
கானமழை இசையே வாழி! களிப்பூட்டும் கவியே வாழி!
ஞானமழை அருளே வாழி! ஞாலத்தின் புகழே வாழி!
மோனநிலை மகிழ்வே வாழி! முகிழ்ந்திட்ட அறிவே வாழி!
 
அருளாகும் வான்ம ழையே அறிவாக ஒளிர்வாய் நீயே!
மருளாகும் மயக்கத் தையே வழக்கொழியக் காப்பாய் நீயே!
உருவாகும் உயிர்மை நீயே!உலகாளச் செய்வாய் நீயே!
திருவாகும் தெய்வம் நீயே! திருவடிக்குத் துணையும் நீயே!
 
வருமழையாய் வழங்கும் வானம் மண்ணோடு புணர்ந்துக் கூடும்!
பெருமழையால் துயரம் ஆயின் பெருக்கிவைக்க மகிழ்ச்சிப் பின்னே!
திருமழையால் குளிரும் உள்ளம் திருவடியைத் துணையாய்க் கொள்ளும்!
அருள்மழையால் நனைந்து நாளும் அறிவொளியைச் சேரும் பாரே!
 
நற்றவர் மழையே வேண்டும்! நானிலம் சிறக்க வேண்டும்!
கற்றவர் களிக்க வேண்டும்! கற்பகம் அருள வேண்டும்!
பெற்றவர் பெருக வேண்டும்! பெண்மையை மதிக்க வேண்டும்!
உற்றவர் உணர வேண்டும் உன்னதம் செழிக்க வேண்டும்!
 
சீர்மிகும் மழையின் செல்வம்! செந்தமிழ் அழகின் தோற்றம்!
ஊர்மிகும் மழையின் ஆற்றல்! உணர்வுறும் உயிரின் ஆக்கம்!
ஏர்மிக மழையைப் போற்று! இன்புற இசையை யேற்று!
நேர்வுற மழையை நாடு! நித்திய தெய்வம் காணே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.