வெடிச்சத்தம் காதுகளைத் துளைப்ப தன்றி
வெடிகளாலே வருகின்ற பயன்தான் என்ன
அடிப்பட்டால் உடல்உறுப்பு வலித்தல் போன்றே
அச்சத்தம் காதுகளைத் துடிக்கச் செய்யும்
முடிகறுப்பாய் புகைகக்கிச் சுற்றுச் சூழல்
முழுவதையும் நஞ்சாக்கி மூச்ச டைக்கும்
குடிஉயிரைக் குடித்தல்போல் வெடிநெ ருப்போ
குற்றுயிராய் ஆக்கிவிடும் கவன மின்றேல் !
ஊர்மெச்ச வெடிக்கின்ற வெடிக ளாலே
உழைப்பாலே வந்தபணம் கரியாய்ப் போகும்
ஊர்தெருக்கள் வீடுகளின் முன்பு றத்தில்
உடலுக்குள் நோய்பரப்பும் குப்பை சேரும்
சீர்கல்வி பெறும்வயதில் தொழிற்சா லைக்குச்
சிறுவர்கள் செல்கின்ற அவலம் ஓங்கும்
போர்க்களத்தின் அழிவைப்போல் செய்வ தன்றிப்
பொலிவுதரும் உற்பத்தி ஆக்க மில்லை !
பட்டாசு வாங்குதற்குச் செலவு செய்யும்
பணந்தன்னை ஏழையர்க்குக் கொடுக்க லாமே
பட்டாடை இல்லையெனினும் பருத்தி ஆடை
பாங்காக வறியவர்க்கு வழங்க லாமே
பட்டினியில் வாடுவோர்கே உணவ ளித்துப்
பசியாற்றும் இன்பத்திற் கீடும் உண்டோ
மட்டட்ற மகிழ்ச்சிவர அனைவர் கூடி
மண்வாசம் கெட்டிடாமல் விழாவெ டுப்போம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.