முகப்பு
கவிதைமணி

பொம்மைகள் : ம. அஹமது நவ்ரோஸ் பேகம் 

Updated On : 10 அக்டோபர், 2016 at 3:33 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:57 PM

உலகைப்  படைத்து பூரிப்பு அடைந்த இறைவன்,
இப்பூவுலகில் உயிரும், உணர்வும் கொண்ட 
மனிதர்களைப்  படைத்து அதனை அலங்கரித்தான்.

இறைவனின் படைப்புகளைக் கண்ட 
மனிதன், தான்  பார்த்து மகிழ, வண்ணமும், 
வடிவும் கொடுத்து பொம்மைகளைச் சமைத்தான். 

உயிர் கொடுக்கும் ஆற்றல் இறைவனுக்கே  
உரித்தானதால், வடிவும், வண்ணமும்  மட்டுமே கொண்டு 
பேசா மடந்தைகள் ஆயின  மனிதனின் பொம்மைகள்.  

Advertisement

பேசாமலே கதைகள் கூறும் பொம்மைகள் 
மத்தியில்  உயிர், உணர்ச்சி இருந்தும் பொம்மைகள் 
போலானர் மனிதர்கள் இன்று. 

கண்கள் இருந்தும் கண் முன்
கொடுமைகள் நடக்கும் பொழுது 
கண்டும், காணாமல் போவதற்கு, விழி இருந்தும் 
பார்க்க முடியாத பொம்மைகளா நாம்?

காதுகள் இருந்தும் கேடான மொழி கேட்கும் பொழுது 
கேளாதது போல் செல்வதற்கு, செவி இருந்தும் 
கேட்க முடியாத பொம்மைகளா நாம்?

தவறுகள் செய்யாமலே
பழிச் சொற்கள் பேசும் பொழுது 
பதில் பேசாமல் மௌனம் காப்பதற்கு  வாய் இருந்தும் 
பேச முடியாத பொம்மைகளா நாம்? 

பொம்மைகள் உலகில் மகாத்மா காந்திக்குப் 
பிடித்த மூன்று பொம்மைகள் சொல்லும் பாடத்தை 
விளங்காமல் போனதால், எது நடந்தால் நமக்கென்ன    
என்று இன்று நாம், விழி மூடி, வாய் பொத்தி,செவி மூடி 
பொம்மைகள் போல் ஆனோம்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.