மனம் எனும் மாயப் பேய் : ம. அஹமது நவ்ரோஸ் பேகம்
ஆண்டி முதல் அரசன் வரை,
சாமானியன் முதல் சித்தர் வரை
அனைவரையும் பேதமின்றிப்
பாடாய்ப் படுத்தும்!
வெப்பமானி, பாரமானி என
எத்தனையோ கருவிகள் எதை,
எதையோ அளப்பதற்கு இருந்தாலும்,
மணிக்கு எத்தனை கிலோமீட்டர்
வேண்டுமானாலும் ஓடும், பறக்கும், தாவும்
மனதின் வேகத்தை அளப்பதற்கு
மனிதனால் எந்தக் கருவியையும்
கண்டு பிடிக்கவே முடியாது!
Advertisement
தீதும், நன்றும் பிறர் தர வாரா
என்பது மனதிற்கே சொல்லப்பட்டதோ?
தீயன வேண்டாம், அடங்கு
என்றால் அடங்காது!
நல்லன செய்வதற்கு அஞ்சாதே,
என்றால் அடங்கிப் போகும் விசித்திரம்
மனிதர்களைப் பாதாளத்தில் தள்ளும்
மனம் எனும் மாயப் பேயின் தந்திரம்!
மனம் எனும் மாயப் பேயினால்
சாம்பலான சமஸ்தானங்களும் உண்டு,
கட்டமைக்கப்பட்ட சாம்ராஜ்யங்களும் உண்டு.
மனதை அடக்கியோர் ஞானிகளானர்.
அடங்கியோர் நஷ்டமடைந்தனர்.
அறிவு என்னும் கடிவாளம் கொண்டு
மனம் என்னும் மாயப் பேயை அடக்குவோர்
ஈருலகிலும் வெற்றி பெறுவர்!
கடிவாளம் தவற விடுவோருக்கு
எவ்வுலகிலும், என்றுமே தோல்விதான்!