ஜன்னல் நிலா: முனைவர் சி. அருள் ஜோசப் ராஜ்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:03 AM
உலகத்தோர் ரசிப்பார்கள் நிலவு தன்னை!
உரிமையுடன் வரவேற்பார் மக்கள் உன்னை!
சலசலக்கும் நீரதனில் நிலவு கண்டு
சகலருமே இரவுதன்னில் மகிழ்தல் உண்டு
நிலவொளியில் கடலழகு; வானில் நீந்தும்
நிறமஞ்சள் பிறையழகு; உன்னைப் பாடா
ஞாலத்து கவிஞரில்லை! மழலை யர்கள்
ஞானத்தில் அம்புலியாய் உதயம் கொண்டாய்!
என்றென்றும் காதலர்க்கே துணையாய் நின்றாய்
எந்நாளும் உறங்கவைத்தே எழுந்து சென்றாய்!
வான்குதித்து மலையேறி கடல்தாண்டியே
வந்தாய்நீ! மங்கைபோல அழகு கூட்டி
வென்றாய்நீ! ரகசியமாய் என்னைக் காண
வெண்ணிலவாய் என்வாசல் வந்தே நின்றாய்
நான் கதவு சார்த்திடவே ஏனோ நீயே
நான் பார்க்க ஜன்னலோரம் வந்தே நின்றாய்!