செங்கோலாய் ஆட்சிநன்றாய் நடக்கும் போது
செம்மையாகத் தீட்டுகின்ற திட்ட மெல்லாம்
தங்குதடை யின்றிப்பாய் வெள்ளம் போன்று
தானாக அனைவருக்கும் சென்று சேரும் !
மங்கலமாய் மன்னர்கள் ஆண்ட போது
மக்கள்தம் குறைகளெல்லாம்தீர்ந்தபோல
தங்கமகன் காமராசர் ஆண்ட போது
தமிழகந்தான் கண்டதந்த மனுவின் ஆட்சி !
நெல்லுக்கு இறைக்கின்ற நீரோ நேராய்
நெல்லுக்கே பாய்ந்துவளம் கூட்டல் போன்று
நல்லவர்கள் கைகளிலே நாடி ருந்தால்
நன்மைசெயும் நேர்மையிலே நெஞ்சி ருந்தால்
சொல்லுக்கும் செயலுக்கும் மாற்ற மின்றிச்
சொல்லெல்லாம் செயலாக மாறி நாட்டில்
எல்லோர்க்கும் எல்லாமும் கிடைத்து வாழ்வு
ஏற்றமுடன் இன்பத்தில் ஒளிரும் நன்றாய் !
இன்றிங்கே காண்கின்ற காட்சி யெல்லாம்
இறைக்கின்ற நீரெல்லாம் நெல்லுக் கன்றி
நன்றாகப் புல்லுக்கே பாய்தல் போன்று
நாடாள்வோர் தமதாகச் சுருட்டு கின்றார் !
வன்முறைகள் அதிகார அச்சு றுத்தல்
வகைவகையாய் செய்கின்ற ஊழ லாலே
நன்மையிங்கே மக்களுக்கு சேர்ந்தி டாமல்
நயமாக அரசியலார் அள்ளு கின்றார் !
வாக்களிக்கப் பணந்தன்னைப் பெறுவ தாலும்
வாய்மூடித் தீச்செயலைப் பார்ப்ப தாலும்
பூக்கள்தம் இசைவின்றித் தேனெ டுத்துப்
பூரிக்கும் வண்டானார் ஆட்சி யாளர் !
தீக்கனலை விழியேற்றிக் கயவர் தம்மைத்
தீய்ப்பதற்கு மக்கள்தாம் எழுந்து விட்டால்
ஆக்கமுடன் இறைக்கும்நீர் நெல்லைச் சேர்ந்தே
அனைவருக்கும் கிடைத்துவிடும் அனைத்தும் நன்றாய் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.