நண்டுகளின் ஓடுகள் நாலா புறம் கிடக்க
மண்டூகம் எங்கோஓடி மறைந்து கொள்ள
கொக்கு நாரை கூடுகளில் அடை காத்திருக்க
வெக்கையும் அனலும் வேந்தராய் வீற்றிருந்தார்.
குடி நீரைத் தேடி வந்த எம் கோதைமாரும் ஒரு
குழி பறித்து ஊறும் நீரை குடத்தில் வார்த்து
தலைச்சுமையாய் தமதில்லம் நோக்கிச் செல்கின்றார்;
தரை கொதிக்கும் மண்ணில் கால்தள் ளாடிடவே.
நீந்தி மகிழ்ந்த சிறுவரெல்லாம் கரையில் நின்று
நீரில்லா குளம் பார்த்து நெடுமூச் செறிந்தார்;
குளக்கரையின் ஆலமர நிழற்பந்தல் கூடி
கூத்தடிக்கும் இளைஞருக்கும் மகிழ்ச்சி இல்லை.
மழை பொழிய வேண்டும் ; குளம் நிரம்ப வேண்டும்;
உழவர் மனம் மகிழக் கொட்டித் தீர்க்க வேன்டும்;
மழையின்றேல் இயக்கமில்லை ; மாநிலத்தில் ஏதுமில்லை;
நீர் வற்றிய குளமெல்லாம் நிரம்பும் வரை மழை வேண்டும்.
இயற்கை கைவிரித்தால் இங்கேதும் நடப்பதில்லை;
செயற்கையாய் மழை பொழியச்செய்வார் எவருமிலர்;
மதகுப் பலகையினை மாற்றிச்சீர் செய்வோம் ;புதர் மண்டும்
வாய்க்காலை குளத்துடன் இணைத்தபடிக் காத்திருப்போம்.