மழை இரவு
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:45 PM
வயலின் வயிறும் வெடித்துக் காய்ந்து
வற்றா தாகந் தன்னில் வதைந்து
இயலா நிலையில் ஏங்கித் தவித்து
இரவும் பகலும் மழைக்காய் ஏங்கின!
வயலுழும் உழவர் வானம் பார்த்து
வயிறும் காய்ந்து வதங்கி கிடக்க
புயலாய் வந்து ஓர்மழை இரவில்
பொழிந்து புவியைக் குளிர வைத்திட
வழிந்த மழையால் உழவர் மகிழ்ந்தர்!
எங்கும் வெள்ளம் கும்மாளம் போட
எளியோர் மனமும் இன்பங் கண்டன;
பொங்கிய மழைவெள் ளத்தால் மகிழ்வைப்
பிடுங்கு மென்று உணரா(து) இருந்தனர்!
Advertisement
வயல்பயிர், மாந்தர்,விலங்கு, வீட்டை
வெள்ளம் விழுங்கின; வேர்பி டித்துப்
புயல்மழை நின்றன; பிழைப்பு மின்றி
பசியில் தவித்தனர்; பிணமாய்ப் போயினர்!
மழைஇர வின்றும் அச்ச மூட்டின;
மழையோ எதிரியாய் மாறிய தாலே;
மழைஇர(வு)ஈந்த வலியால் மழையை
வெறுத்தால் மண்ணுயிர் வாழாது ; அழைப்போம்!
- நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன்.