மழை இரவு
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:45 PM
ஒண்டுதற்கு இடமுமின்றி
ஓடுதற்குவழியுமின்றி
நனைத்துக் கொண்டிருக்கிறது
நடைபாதை வாசிகளை
இந்த மழை இரவு.
தெரு நாய்கள்
இங்குமங்கும் அலைகின்றன
நனைந்து கொண்டே
மனிதருக்குப் போட்டியாக
இடம் பிடிப்பதற்கு.
இளந்தம்பதியரின்
இன்ப இரவாய் ஆக்க
மழை இரவு தவறி விட்டது
ஒழுகும் நீர்
பிடித்து வைக்கப் பாத்திரங்களின்றி.
Advertisement
நடுங்கிக் கொண்டு
முணுமுணுத்தவாறு
சபிக்கின்றனர்
முதியோர்கள் குளிர் பொறுக்காமல்.
காமத்தைத் தீர்த்துக் கொள்ள
மறைவிடமின்றி
ஒட்டி உராயதலில்
நிறைவு பெறுகிறான் ஒருவன்
குளிரூட்டப்பட்ட அறையில்
தூக்கம் வராமல் நெளிபவன்
அறைக்கு வெளியே வந்து
நடக்கும் மழைஇரவுக் காட்சிகளை
ரசித்துக் கொண்டிருக்கிறான்
பெய்யும் மழையையும் சேர்த்து.
அடாத மழை காரணமாய்
அடுத்த நாள் நிச்சயம்
பள்ளி விடுமுறை கிட்டுமெனத்
தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள்
நிம்மதியாய்......
- கவிஞர் 'இளவல்’ஹரிஹரன், மதுரை