வெல்லும் சொல்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
Updated On : 30 ஜனவரி, 2024 at 7:05 PM
கால் பதிக்கும் இடமெல்லாம்
கோலோச்சும் தடமாக மாற்றும்
“ உழைப்பா?”
உலக உயிரினங்களின்
உள்ளங்களை உள்ளிழுக்கும்
சொல் ஒன்று! “ உண்மையா? ”
வாழ்க்கை வாகனத்தை
மென்மையாய் நகர்த்தும்
எரிபொருள் ஒழுக்கம் – அதுவா ?
சுற்றி இருக்கும் மனங்களை
சுட்டி இழுக்கும்
வெற்றிச்சொல்
“தானமா? நிதானமா ?”
பஞ்சிலிருந்து இல்லை
நஞ்சிலிருந்தும்
நூல் உருவாக்கும்
“நெஞ்சுரமா ?”
Advertisement
ஜெகத்தையே ஜெயிக்கும்
தனிச்சொல் “திறமையா”?
செல்வம் நோக்கும்
மாறுகண் வேண்டாம் –
“கடமையும் கல்வியும்”
ஒரே பார்வையாய் வெல்லுமோ ?
வங்கிகளில் வேண்டாம் -
உறவுகளில், உணர்வுகளில்
ஒரு தன்னலமற்ற முதலீடு !
இந்த பொதுநலச்சொல்லா ?
இப்படி- இப்படிதான்
சிந்தனையை அலையவிட்டிருந்தேன்--
வெல்லாத சொல்
இல்லாத மொழி,
தமிழ் எனப்புரிந்தது !