விட்டுஇலங்கு செஞ்சோதித் தாமரை பாதம், கைகள், கண்கள்,
விட்டுஇலங்கு கரும்சுடர் மலையே திரு உடம்பு,
விட்டுஇலங்கு மதியம் சீர் சங்கு, சக்கரம் பரிதி,
விட்டுஇலங்கு முடி அம்மான் மதுசூதனன் தனக்கே.
மலர்ந்து திகழும் திருமுடியைக் கொண்ட அம்மான் மதுசூதனன், அவனது திருவடிகள், திருக்கைகள், திருக்கண்கள் அனைத்தும் செஞ்சோதிபோல் மலர்ந்து திகழும் தாமரையைப் போன்றவை, அவனது திருமேனி, மலர்ந்து திகழும் கரும் சுடர் மலை போன்றது, அவனது சிறந்த சங்கு, மலர்ந்து திகழும் நிலவைப் போன்றது, அவனது திருச்சக்கரம் சூரியனைப் போன்றது.
•••
பாடல் - 6
மதுசூதனை அன்றி மற்றுஇலேன் என்று எத்தாலும் கருமம் இன்றித்
துதிசூழ்ந்த பாடல்கள் பாடி ஆட நின்று ஊழி ஊழிதொறும்
எதிர்சூழல் புக்கு, எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதிசூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே.
மதுசூதனனையன்றி வேறு யாரையும் நான் தஞ்சமடையமாட்டேன், வேறு எந்தப் பொருளிலும் எனக்கு ஆர்வமில்லை, பயனில்லை, ஊழி ஊழிக்காலமும் அவனுடைய புகழைப்பாடும் பாடல்களையே பாடி ஆடி நின்றேன், என்னுடைய ஒவ்வொரு பிறப்பிலும், எனக்கு அருள் செய்வதற்காக எம்பெருமான் அவதாரம் எடுத்தான், என்னெதிரே வந்தான், இப்படி எனக்குத் தொடர்ந்து அருள்செய்யுமாறு எதுதான் அம்மான் திரிவிக்கிரமனைச் செலுத்தியதோ! (அவன் பக்தர்கள் மீது வைத்திருக்கும் கருணைதான் அவனை என்மீது அருள் செய்யுமாறு செலுத்தியது.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.