பாடல் - 3
வீவுஇல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவுஇல் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான்தனை
வீவுஇல் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்,
வீவுஇல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.
மிகுந்த இன்பத்தின் எல்லையிலே தங்கியிருப்பவன் நம் அச்சுதன், அழியாத சிறப்புகளைக் கொண்டவன், மலர் போன்ற கண்களை உடையவன், விண்ணோர் பெருமான், அத்தகைய எம்பெருமானை முடிவில்லாத காலம்வரை இசைமாலைகளால் போற்றி வாழ்த்தும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது, அதனால், முடிவில்லாத இன்பத்தின் எல்லையைப் பெற்றேன்.
*******
பாடல் - 4
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்,
தூவிஅம் புள் உடையான், அடல் ஆழி அம்மான்தனை
நா இயலால் இசைமாலைகள் ஏத்தி நண்ணப்பெற்றேன்,
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.
பொருந்தி நின்று தன்னைத் தொழுகிறவர்களுடைய வினை போகும்படி பொருந்தி நின்று அருளுகிற பெருமான், சிறகுகளை உடைய, அழகிய கருடனைத் தன் வாகனமாகக் கொண்டவன், பகைவர்களை அழிக்கும் சக்ராயுதத்தை ஏந்திய அம்மான், அத்தகைய எம்பெருமானை என்னுடைய நாவால் போற்றினேன், இசைமாலைகளைப் பாடி வணங்கினேன், அவன் திருவடிகளைச் சென்றடைந்தேன், அந்தப் பரமாத்மா என்னுடைய ஆவியில் புகுந்து எனக்கு அருளினான், அது எப்படியோ, அந்தத் தன்மையை நான் அறியேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.