சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதிஅம் சோதி உருவை
அங்கு வைத்து இங்கு பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள்தோறும் துள்ளாதார்,
ஓதி உணர்ந்தவர்முன்னா
என் சவிப்பார் மனிசரே?
சாதுக்களைக் கொடுமைப்படுத்திய கம்சனை வீழ்த்துவதற்கென்று எம்பெருமான் கண்ணனாக அவதரித்தான். அப்படி வரும்போது, அனைத்துக்கும் முதலாவதான தன்னுடைய அழகிய சோதி வடிவத்தை அங்கே வைத்துவிட்டு, இங்கே வந்து பிறந்தான், அப்படிப்பட்ட வேத முதல்வனைப் பாட வேண்டும், வீதிகள்தோறும் ஆடித் துள்ளவேணும், அதுவே மனிதர்களின் கடமை, அதைச் செய்யாதவர்கள், அனைத்தையும் கற்ற பெரியோர்முன்னே எதைச்சொல்லித் துதிப்பார்கள்?
•••
பாடல் - 6
மனிசரும் மற்றும் முற்றுமாய்
மாயப்பிறவி பிறந்த
தனியன், பிறப்புஇலிதன்னை,
தடம்கடல் சேர்ந்த பிரானை,
கனியை, கரும்பின் இன்சாற்றை,
கட்டியை, தேனை, அமுதை
முனிவுஇன்றி ஏத்திக் குனிப்பார்
முழுதுஉணர் நீரமியினாரே.
பொதுவாக எல்லாரும் தங்களுடைய கருமங்களாலேயே மனிதப்பிறவி எடுக்கிறார்கள், மற்ற பிறவிகளையும் எடுக்கிறார்கள், ஆனால் எம்பெருமானுக்கோ அத்தகைய பிறவிகள் இல்லை, அவன் தன்னுடைய விருப்பத்தினாலேயே இந்த மாயப்பிறவிகளை எடுக்கிறான், அந்த ஒப்பற்ற பெருமான், பெரிய திருப்பாற்கடலில் கண்வளர்கிற தலைவன், இனிய கனி போன்றவன், கரும்பின் இனிய சாறு போன்றவன், இனிய (சர்க்கரைக்)கட்டியானவன், தேன் போன்றவன், அமுது போன்றவன், அத்தகைய பெருமானை வெறுப்பின்றிப் பாராட்டி மகிழ்ந்து நடனமாடுகிறவர்களுக்கு எல்லா ஞானமும் கைவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.