பாடல் - 1
கொண்ட பெண்டிர், மக்கள், உற்றார், சுற்றத்தவர், பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை,
எண் திசையும் கீழும் மேலும் முற்ற உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே.
மனைவி, குழந்தைகள், உறவினர்கள், சுற்றத்தவர்கள், பிறர்… இப்படி எல்லாரும், ஏதோ ஒரு பயனைக் கருதியே உடனிருக்கிறார்கள், அவர்களுக்கு உண்மையான அன்பு இல்லை. எட்டுத் திசைகளையும் கீழே, மேலே, முழுமையாக உண்ட பிரானுடைய தொண்டர்களாகி உய்வோம், வேறு துணை நமக்கில்லை.
பாடல் - 2
துணையும் சார்வும் ஆகுவார்போல் சுற்றத்தவர், பிறரும்
அணைய வந்த ஆக்கம் உண்டேல், அட்டைகள்போல் சுவைப்பர்,
கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த எம் கார்முகிலே
புணை என்று உய்யப்போகில் அல்லால் இல்லை கண்டீர் பொருளே.
ஒருவனால் தங்களுக்குப் பயன் உண்டு என்றால், அவனுடைய சுற்றத்தாரும் பிறரும் அவனுக்குத் துணையாக, சார்பாக இருப்பதுபோல் ஒட்டிக்கொள்வார்கள், அட்டைகளைப்போல் அவனுடைய ரத்தத்தை உறிஞ்சுவார்கள். ஒரே அம்பாலே ஏழு மராமரங்களைத் துளைத்த நம் கார்முகிலையே தஞ்சமாக அடையுங்கள், வேறு பொருள் நமக்கில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.