பாடல் - 5
சதுரம் என்று தம்மைத் தாமே சம்மதித்து இன்மொழியார்
மதுர போகம் துற்றவரே வைகி மற்று ஒன்று உறுவர்,
அதிர்கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு
எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே.
தாங்கள் நன்றாக வாழ்வதாக எண்ணிக்கொண்டு, இனிய மொழிகளைப் பேசுகிற பெண்களின் இனிய போகங்களை அனுபவிக்கிறவர்கள், பின்னர் வேறொரு (அவமானகரமான) நிலையை அடைவார்கள். அஞ்சச்செய்யும் செயல்களையுடைய அசுரர்கள் மங்கும்படி வடமதுரையிலே றந்த எம்பெருமானை ஏற்றுக்கொண்டு அவருக்கு அடிமையாக இருந்து உய்யவேண்டும், வேறு இன்பம் நமக்கில்லை.
பாடல் - 6
இல்லை கண்டீர் இன்பம், அந்தோ, உள்ளது நினையாதே
தொல்லை யார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்து ஒழிந்தார்,
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி உய்யப்போகல் அல்லால் மற்று ஒன்று இல்லை சுருக்கே.
இந்த உலகத்தில் நிலையான இன்பம் என்று நாம் நினைப்பதெல்லாம் உண்மையில் நிலையான இன்பமே இல்லை, இதை நினைக்காமல் அன்று முதல்
இன்றுவரை எத்தனையோ பேர் பிறந்தார்கள், வாழ்ந்தார்கள், மறைந்தார்கள், அடடா! செல்வம் மிகுந்த, பழமையான வடமதுரையிலே பிறந்த எம்பெருமானுடைய வளம் நிறைந்த புகழைச் சொல்லி உய்யவேண்டும், வேறு சுருக்குவழி நமக்கில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.