10. சந்திரனை மாகங்கை - பாடல் 7
இந்த பாடல் அகத்துறை வகையில் அமைந்தது. சிவபெருமான் மீது காதல் கொண்டு எப்போதும் அவனையே நினைத்து வாழ்ந்த தலைவி,
குழலோடு கொக்கரை கைத் தாளம் மொந்தை குறட் பூதம் முன் பாடத் தான் ஆடும்மே
கழலாடு திருவிரலால் கரணம் செய்து கனவின் கண் திருவுருவம் தான் காட்டும்மே
எழிலாரும் தோள் வீசி நடமாடும்மே ஈமப் புறங்காட்டில் ஏமம் தோறும்
அழலாடுமே அட்ட மூர்த்தியாமே அவனாகில் அதிகை வீரட்டனாமே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">இந்த பாடல் அகத்துறை வகையில் அமைந்தது. சிவபெருமான் மீது காதல் கொண்டு எப்போதும் அவனையே நினைத்து வாழ்ந்த தலைவி, தனது கனவில் சிவபெருமானை கண்ட செய்தியை உரைப்பதாக அமைந்துள்ளது. சிவபெருமான் பால் மிகுந்த பக்தி கொண்ட அடியார்கள் அப்பர் நாயகியாக இங்கே உருவகப்படுத்தப் பட்டுள்ளார்கள். கொக்கரை = சங்கு: மொந்தை = ஒரு விதமான பறைக் கருவி, தோலால் செய்யப்பட்டது: குறட்பூதம் = குட்டையான தோற்றம் கொண்ட பூத கணங்கள்: கரணம் செய்தல் = அசைத்தல் இயக்குதல்: அனைத்து உயிர்களுடன் கலந்திருந்து அந்த உயிர்களை இயக்குபவன் சிவபெருமான் என்பது சைவ சித்தாந்தக் கொள்கை. இந்த செயலை எவ்வளவு எளிதாக பெருமான் செய்கின்றார் என்பதை நமக்கு அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். தனது கால் விரல்களை அசைப்பது போன்று எளிய செயலாக அனைத்து உயிர்களையும் பெருமான் இயக்குகின்றார் என்று இங்கே கூறுகின்றார். விரலசைப்பதை விட எளிய செயல் வேறு ஏதேனும் உண்டோ? அட்ட மூர்த்தி = நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன் மற்றும் அனைத்து உயிர்களிலும் கலந்து இறைவன் இருக்கும் தன்மை அட்ட மூர்த்தி என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. ஈமம் = பிணம் சுடும் விறகு: யாமம் என்ற சொல் ஏமம் என்று திரிந்துள்ளது. ஏமம் தோறும் (அதாவது யாமம் தோறும்) என்று இறைவன் எப்போதும் நடமாடும் நிலை இங்கே குறிப்பிடப்படுகின்றது.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">குழல், கொக்கரை, மொந்தை, தாளம் ஆகிய இசைக் கருவிகளை இயக்கியவாறு, குட்டையான உருவம் கொண்ட பூத கணங்கள் பாட, அந்த பாடலுக்கு ஏற்ப நடமாடும் திறமை பெற்றவன் சிவபெருமான். வீரக் கழல்கள் அணிந்த தனது கால் விரல்களை அசைப்பது போன்று, மிகவும் எளிமையான செயலால் அனைத்து உயிர்களையும் இயக்கும் வல்லமை படைத்தவன் சிவபெருமான். தன் பால் மிகுந்த அன்பு கொண்ட அடியார்களின் கனவில் தனது தோற்றத்தை புலன்படுத்தும் கருணை உள்ளம் கொண்டவன் சிவபெருமான். அழகு மிகுந்த தனது தோள்களை வேகமாக அசைத்து நடனம் ஆடும் திறமை பெற்றவன் சிவபெருமான். ஊருக்கு புறத்தே அமைந்துள்ள, சுடுகாட்டினில் நெருப்பினில் நின்று எப்போதும் நடமாடுபவர் சிவபெருமான். அவர் தான் அட்டமூர்த்தியாக அனைத்து இடங்களிலும், அனைத்து உயிர்களிலும் கலந்து உறைகின்றார். இத்தகைய தன்மைகளைக் கொண்ட சிவபெருமான் அதிகை வீரட்டானத்தில் உறையும் பெருமான் ஆவார்.</p>