5. சுண்ண வெண்சந்தனச் சாந்தும் - பாடல் 5
காமத்தர் = பல விருப்பங்களை உடையவர். வலம் ஏந்துதல் = கண்ணாகக் கொண்டு இருத்தல். இரு சுடர் = சூரியன் சந்திரன் ஆகிய இருவர்.
பலபல காமத்தராகிப் பதைத்து எழுவார் மனத்துள்ளே
கல மலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும்
வலம் ஏந்தி இரண்டு சுடரும் வான் கயிலாய மலையும்
நலமார் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">காமத்தர் = பல விருப்பங்களை உடையவர். வலம் ஏந்துதல் = கண்ணாகக் கொண்டு இருத்தல். இரு சுடர் = சூரியன் சந்திரன் ஆகிய இருவர்.</p><p align="JUSTIFY">எங்கும் எதிலும் சிவபிரானையே காணும் அப்பர் பெருமானுக்கு, தன்னை எதிர் நோக்கி வரும் யானையைக் கண்டவுடன், பக்தர்களின் இடர் தீர்ப்பதற்காக சிவபிரான் அருளிய யானை முகம் கொண்ட கணபதி நினைவுக்கு வருகின்றார். கணபதி என்னும் களிற்றினை உடைய சிவபிரான் என்று இங்கே குறிப்பிடுகின்றார். கணபதிப் பெருமான் தோன்றிய விதமும், காரணமும் ஞானசம்பந்தப் பெருமானின் வலிவலம் பதிகத்திலும் மற்ற பல தேவாரப் பாடல்களிலும் காணப்படுகின்றன. தன்னை வழிபடும் அடியார்களின் இடர்களைக் களைவதற்காக கணபதியை படைத்ததாக இங்கே சம்பந்தர் கூறுகின்றார்.</p><p align="JUSTIFY">பிடி அதன் உரு உமை கொள மிகு கரி அது</p><p align="JUSTIFY">வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்</p><p align="JUSTIFY">கடி கணபதி வர அருளினன் மிகு கொடை</p><p align="JUSTIFY">வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே</p><p align="JUSTIFY">தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, யானை முகம் கொண்ட கயமுகாசுரன் என்ற அரக்கனை வெல்வதற்காக சிவபிரானால் படைக்கப்பட்டவர் கணபதிப் பெருமான். எதிர்த்து வரும் யானைக்கு இந்த நிகழ்ச்சியை நினைவூட்டுவதன் மூலம், சிவபிரானின் அடியானாகிய தனக்கு இடையூறு ஏதும் செய்ய நினைத்தால், அந்த யானைக்குத்தான் தீங்கு நேரிடும் என்பதனை அந்த மதயானைக்கு உணர்த்தும் முகமாக கணபதியைப் பற்றிய குறிப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் கூறுவார்கள்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">தங்களது மனத்தினில் பல பல விருப்பங்கள் உடைய அடியார்கள் அந்த விருப்பங்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நினைத்து பதைத்து எழுந்து அந்த இடையூறுகளை நீக்கும் பொருட்டு, கணபதியை வழிபடுகின்றனர். கணபதிப் பெருமானும், அத்தகைய அடியார்களின் மனதினில் உள்ள மலங்களை நீக்கி, அவர்களது விருப்பங்களை நிறைவேற்றுகின்றார். இத்தகைய பெருமை வாய்ந்த கணபதி என்று அழைக்கப்படும் யானை முகத்தானை தனது மகனாக உடையவரும், சூரியன் சந்திரன் ஆகிய இவர்களையும் தனது கண்களாக உடையவரும், பெருமை வாய்ந்த கயிலாய மலையினைத் தனது இருப்பிடமாக உடையவரும் ஆகிய சிவபெருமான், நீராடுவார்களின் பாவத்தை நீக்கித் தூய்மை படுத்தும் கெடில நதியினை, தான் விரும்பி மேவும் அதிகைத் திருக்கோயிலுக்குத் தீர்த்தமாகக் கொண்டுள்ளார். அவருக்கு அடியவனாகிய ஆகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை</p><p align="JUSTIFY"> </p>