6. ஈன்றாளுமாய் எனக்கு - பாடல் 2
இறைவன் சிவபெருமான் ஒருவன் தான் நமக்கு உண்மையான் உறவினன் என்று கூறும் அப்பர் பிரான், இந்த உலகம் முழுவதும் கடலால் சூழப்பட்டாலும்,
பற்றாய் நினைந்திடு எப்போது நெஞ்சே இந்தப் பாரை முற்றும்
சுற்றாய் அலைகடல் மூடினும் கண்டேன் புகல் நமக்கு
உற்றான் உமையவட்கு அன்பன் திருப்பாதிரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியினான் தன் மொய் கழலே
</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">உற்றான் = உறவினன்.</p><p align="JUSTIFY">இறைவன் சிவபெருமான் ஒருவன் தான் நமக்கு உண்மையான் உறவினன் என்று கூறும் அப்பர் பிரான், இந்த உலகம் முழுவதும் கடலால் சூழப்பட்டாலும், நமக்கு அடைக்கலமாக விளங்குபவன் சிவபெருமானின் திருப்பாதங்கள்தான் என்று கூறுகின்றார். அப்பர் பிரான் தனது நெஞ்சத்தை நோக்கிக் கூறுவதாக இந்த பாடல் அமைந்திருந்தாலும், நமக்குச் சொல்லும் அறிவுரையாக எடுத்துக் கொள்ளலாம்.</p><p align="JUSTIFY">சமணர்களின் வஞ்சனையால் கடலில் தள்ளப்பட்ட சிவபிரான் தன்னை வழிபடும் எவரையும் கடலில் மூழ்காமல் காப்பாற்றுவார் என்று அப்பர் பிரான் கூறவந்தார் போலும். கடலின் ஆழம் அனைவரும் அறிந்த ஒன்று என்பதால் எவரும் கடலின் அருகே சென்று மூழ்கும் நிலைக்கு ஆளாகமாட்டார்கள். மேலும் கடலில் கல்லுடன் கட்டித் தள்ளிவிடப்படுவது என்பது மிகவும் அரிதாக நடக்கக்கூடிய நிகழ்ச்சி. எனவே இயற்கைச் சீற்றத்தின் விளைவாக கடல் பொங்கி வருவதும், ஊழிக் காலத்தில் பொங்கி வருவதும்தான் கடல் நம்மை மூழ்கடிக்கக்கூடிய வாய்ப்புகள். அத்தைகைய நேரத்திலும் சிவபிரான், அவரிடம் பக்தி செலுத்தும் எவரையும் கடலில் மூழ்காமல் காப்பார் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">நெஞ்சமே, பரந்த இந்த உலகினைச் சூழ்ந்துள்ள கடல் பொங்கி முழுவதுமாக மூடினாலும் கவலைப்பட வேண்டாம். நமக்கு உற்ற துணையாக அடைக்கலம் கொடுப்பவனை நான் கண்டுகொண்டேன். அவன்தான் உமை அம்மைக்கு மிகவும் அன்பானவனும், இளம் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடி இருபவனும் ஆகிய சிவபெருமான். எனவே எப்போதும் அவனையே நினைந்து அவனது திருப்பாதங்களைப் பற்றிக் கொள்.</p>