முகப்பு
தினம் ஒரு தேவாரம்

6. ஈன்றாளுமாய் எனக்கு - பாடல் 4

கடலில் மூழ்கவிடாமல் கரையேறச் செய்து நலம் புரிந்த சிவபெருமான்.

Updated On : 4 நவம்பர், 2015 at 1:08 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:03 PM

மாயம் எல்லாம் முற்ற விட்டு இருள் நீங்க மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தான் அவன் தன் திருவடிக்கே
தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும் திருப்பாதிரிப்புலியூர்
மேய நல்லான் மலர்ப் பாதம் என் சிந்தையுள் நின்றனவே

</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">தேயம் = தேசம். இருள் = ஆணவ மலம். இறைஞ்சுதல் = வேண்டுதல். நல்லான் = நலம் புரிந்தவன். கடலில் மூழ்கவிடாமல் கரையேறச் செய்து நலம் புரிந்த சிவபெருமான்.</p><p align="JUSTIFY">சிவாயநம என்ற திருமந்திரத்தில் உள்ள சி என்ற எழுத்து சிவபிரானையும் வா என்ற எழுத்து சிவபிரானின் அருள்சக்தியாகிய உமையம்மையையும், ய என்ற எழுத்து ஆன்மாவையும் ந என்ற எழுத்து மாயா மலத்தையும் ம என்ற எழுத்து ஆணவ மலத்தையும் குறிப்பதாக கூறுவார்கள். நடுவில் இருக்கும் ஆன்மா ஒரு புறத்தில் ஆணவம் கன்மம் என்ற மலங்களாலும் மறுபுறம் சிவபிரான் மற்றும் அருட்சக்தியால் சூழப்பட்டு இருக்கின்றது. மாயையை விட்டு நீங்கினால், ஆன்மா சிவத்தையும் சிவனது அருட்சக்தியையும் சென்று சாரும்; மாயையின் வசப்பட்டால் இறைவனைச் சென்று அடைய முடியாது என்பது சைவ சித்தாந்தக் கொள்கை. இதனை விளக்கும் திருமந்திரப் பாடல் ஒன்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.</p><p align="JUSTIFY">சிவன் சத்தி சீவன் செறு மலமாயை<br />அவம் சேர்ந்த பாசமலம் ஐந்து அகலச்<br />சிவன் சக்தி தன்னுடன் சீவனார் சேர<br />அவம் சேர்ந்த பாசம் அணுக கிலாவே</p><p align="JUSTIFY">மாயா மலத்தை மாயை, திரோதாயி, மாயேயம் என்று மூன்றாகப் பிரித்து ஆணவம் கன்மம் எனப்படும் மாயையுடன் சேர்த்து ஐந்து மலங்கள் என்றும், ஆணவம் கன்மம் மாயை என்று மூன்று மலங்களாகவும் கூறுவார்கள். திருமூலர் இங்கே ஐந்து என்று மலங்களைக் குறிப்பிடுகின்றார். சிவன், சத்தி, சீவன் (ஆன்மா) வெல்லமுடியாத ஆணவமலம், பாசங்களை ஏற்படுத்தி நம்மை உலகியல் பொருட்களுடன் பிணைக்கும் மாயா மலம் என்ற ஐந்தினையும் சிவாயநம என்ற மந்திரம் குறிப்பதாக இங்கே கூறுகின்றார். ஐந்து வகையான மலங்களின் பிடியிலிருந்து நாம் விடுபட்டால், ஆன்மா சிவனுடன் சக்தியுடனும் சேர, வினைகள் நம்மை அணுகாது; ஆன்மா உய்யும். இதே கருத்தினைத் தான் அப்பர் பிரான் இங்கே, மாயா மலம் முற்றும் விட்டு, ஆணவ மலமாகிய இருள் நீங்கினால் மலைமகளையும், அவளுடனாக இருக்கும் சிவபிரானைச் சென்று அடையலாம் என்று கூறுகின்றார்.</p><p align="JUSTIFY">ஆணவ மலம் என்பது அறியாமை. உண்மையான மெய்ப்பொருளை, சிவபெருமானை நாம் அறியவிடாமல் நம்மைத் தடுப்பது ஆணவமலம். அதனால் தான் இருள் என்று ஆணவ மலத்தை குறிப்பிடுவார்கள். கன்மமலம் என்பது உயிர்கள் இதற்கு முன்னர் செய்த வினைகளால் வரும் பயன். உலகினையும் உலகில் உள்ள பொருட்களையும் மாயை என்று சொல்வார்கள். மாயை என்றால் பொதுவாக உலகம். திரோதாயி என்றால் மறைப்புச் சக்தி. மாயேயம் என்றால் உலகில் உள்ள பொருட்கள்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">மலைமகளாகிய பார்வதியிடம் நிலையான அன்பு வைத்துள்ள சிவபிரானின், கடலில் தள்ளப்பட்ட என்னை கரையேறச் செய்து நலம் புரிந்த பெருமானின், உலகம் எல்லாம் வந்து வழிபடுமாறு திருப்பாதிரிப்புலியூர் தலத்தில் உறையும் சிவபெருமானின் மலர் போன்ற திருவடிகள் எனது சிந்தையில் வந்து நின்றதன் காரணமாக, அடியேனைப் பற்றியிருந்த மாயங்கள் என்னை விட்டு நீங்கின; இருளாகிய ஆணவமலம் விலகியது.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.