6. ஈன்றாளுமாய் எனக்கு - பாடல் 7
பாற்கடலைக் கடைந்து அதனின்று திரண்டு வரும் அமுதத்தினை உண்டு நெடுநாள் வாழலாம் என்ற ஆசையில்,
எண்ணாது அமரர் இரக்கப் பரவையுள் நஞ்சம் உண்டாய்
திண்ணார் அசுரர் திரிபுரம் தீயெழச் செற்றவனே
பண் ஆர்ந்து அமைந்த பொருட்கள் பயில் பாதிரிப்புலியூர்க்
கண்ணார் நுதலாய் கழல் நம் கருத்தில் உடையனவே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">பரவை = கடல். திண்ணார் = வலிமை மிகுந்த</p><p align="JUSTIFY">பாற்கடலைக் கடைந்து அதனின்று திரண்டு வரும் அமுதத்தினை உண்டு நெடுநாள் வாழலாம் என்ற ஆசையில், பாற்கடலைக் கடையத் தொடங்கிய தேவர்களும் அசுரர்களும் முதலில் சிவபிரானை நினைக்கவில்லை. ஆனால் கடைவதற்கு கயிறாக பயன்படுத்தப் பட்ட வாசுகிப் பாம்பு, தனது உடலில் விளைந்த வேதனையால் விடத்தினை வெளியிட்ட போது, விடத்திற்கு பயந்து திருமால் உள்ளிட்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமானை, விடத்திலிருந்து தங்களைக் காக்குமாறு வேண்டினார்கள். இந்த நிகழ்ச்சி தான் முதலில் எண்ணாமல் இருந்த தேவர்கள் பின்னர் சிவபெருமானை வேண்டினார்கள் என்ற பொருள் பட எண்ணாது அமரர் இரக்க என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றது. இந்த நிகழ்ச்சி பல பாடல்களில் மிகவும் விரிவாக கூறப்பட்டுள்ளது. அத்தகைய பாடல்களில் ஒரு பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது (நான்காம் திருமுறை, பதிக எண் 14, முதல் பாடல்)</p><p align="JUSTIFY">பருவரை ஒன்று சுற்றி அரவம் கை விட்ட இமையோர் இரிந்து பயமாய்</p><p align="JUSTIFY">திருநெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய்</p><p align="JUSTIFY">பெருகிட மற்று இதற்கோர் பிதிகாரம் ஒன்றை அருளாய் பிரானே எனலும்</p><p align="JUSTIFY">அருள் கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர் அரசே</p><p align="JUSTIFY">பருவரை = மந்தரமலை இரிந்து = சிதறி ஓடி; அடுதல் = அழித்தல்; அடுவான் = அழிக்க பிதிகாரம் = கழுவாய், மாற்று. பாற்கடலைக் கடைவதற்காக மந்தர மலையைச் சுற்றி வளைத்து கயிறு போல் கட்டப்பட்ட வாசுகியாகிய பாம்பு, தனது உடல்வலி தாளாமல் விடத்தை கக்க, தேவர்கள் மிகவும் பயந்து சிதறி ஓடி, கரிய நிறம் கொண்ட திருமாலின் நிறத்தையே மேலும் கரியதாக மாற்றுவது போல் அடர்ந்த கரிய நிறம் கொண்டதும், வானத்தையும் சுட்டெரிப்பது போல் மிகவும் வேகமாக எங்கும் பரவியும் படர்ந்த விடத்திற்கு ஒரு மாற்றம் அருளவேண்டும் பெருமானே என்று சிவபிரானிடம் வேண்டியபோது அவர் அந்த விடம் மற்றவர்களைத் தாக்கி எரித்துவிடாதபடி உண்டு அனைவரையும் காப்பாற்றினார் என்று இந்த பாடலில் சொல்லப்படுகின்றது. கடலிலிருந்தும் நஞ்சம் எழுந்தது என்றும் கூறுவார்கள்.</p><p align="JUSTIFY">பிரமன் போல் திறம் படைத்த அந்தணர்கள் வாழ்ந்த தலம் என்று இதே பதிகத்தின் வேறொரு பாடலில் கூறிய அப்பர் பிரான், பண்ணுடன் இசைத்துப் பாடப்படுவதாகிய சாமவேதம் இடைவிடாது பயிலப்பட்ட தலம் என்று இங்கே கூறுகின்றார்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">முதலில் உன்னை தியானிக்காமல் பாற்கடலைக் கடைய முற்பட்டபோது, கடலிலிருந்து எழுந்த நஞ்சினை, தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி உண்டவனே, வலிமை படைத்த திரிபுரத்து அரக்கர்கள் மூவரையும் அவர்கள் இருந்த கோட்டையோடு தீயில் கருகச் செய்தவனே, இசைப் பண்களோடு இணைந்த சாமவேதத்தை இடைவிடாது அந்தணர்கள் பயிலும் திருப்பாதிரிப்புலியூர் தலத்தில் உறைபவனும் நெற்றியில் கண்ணுடையவனும் ஆகிய சிவபெருமானே, உமது திருப்பாதங்கள் எங்களது உள்ளத்தில் இருந்து எங்களை ஆள்கின்றன.</p>