7. வெறிவிரவு கூவிள - பாடல் 6
பாய்ந்து வந்த கங்கை நதியைத் தனது சடையில் ஏற்கும் வல்லமை படைத்தவனும், மை போன்று கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடையவனும்,
ஆறு ஏற்கவல்ல சடையான் தன்னை அஞ்சனம் போலும் மிடற்றான் தன்னைக்
கூறு ஏற்கக் கூறமர வல்லான் தன்னைக் கோல் வளைக்கை மாதராள் பாகன் தன்னை
நீரேற்கப் பூசும் அகலத்தானை நின்மலன் தன்னை நிமலன் தன்னை
ஏறேற்க ஏறுமா வல்லான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">கூறு = பொருட்களின் நுண்ணிய கூறுகள்;</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">பாய்ந்து வந்த கங்கை நதியைத் தனது சடையில் ஏற்கும் வல்லமை படைத்தவனும், மை போன்று கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடையவனும், பொருட்களின் நுண்ணிய பகுதிகளிலும் உள்ளே இருந்து அந்த கூறுகளுக்கு பற்றுக்கோடாக உள்ளவனும், அழகிய வளையல்களை தனது கையில் அணிந்துள்ள உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டவனும், திருநீற்றினை பூசிய அகலமான மார்பினை உடையவனும், களங்கம் ஏதும் இல்லாதவனும், பிறரது களங்கங்களை போக்க வல்லவனும், மலங்கள் அணுக முடியாத தன்மை படைத்தவனும், காளையை வாகனமாக ஏற்று, வல்லமையுடன் அதனைச் செலுத்த வல்லவனும் ஆகிய சிவபெருமானை, நான் பண்டைய நாட்களில் இகழ்ந்தேன். என்னே பரிதாபமான நிலைமை.</p>