3. நாமார்க்கும் குடியல்லோம் - பாடல் 9
இந்த சொற்றொடர் அப்பர் பெருமானை மன்னனிடம் அழைத்துச் செல்ல பல்லவ மன்னனின் மந்திரிகள் படையுடன் வந்த தன்மை,
சடையுடையான் சங்கக் குழையோர் காதன் சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி
விடையுடையான் வேங்கை அதள் மேலாடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த
உடையுடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற
படையுடையான் பணி கேட்கும் பணியோம் அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">விடை = இடபம், நந்தி</p><p align="JUSTIFY">வேங்கை அதள் = புலித்தோல்</p><p align="JUSTIFY">உழை மான் = மானில் ஒரு வகை</p><p align="JUSTIFY">உம்மோடு மற்றும் உளராய் நின்ற படை = நீரும் உம்முடன் வந்துள்ள படைவீரர்களும்.</p><p align="JUSTIFY">இந்த சொற்றொடர் அப்பர் பெருமானை மன்னனிடம் அழைத்துச் செல்ல பல்லவ மன்னனின் மந்திரிகள் படையுடன் வந்த தன்மை, இங்கே உணர்த்தப்பட்டுள்ளது. சிவபெருமான் நம்மை உடையான் கண்டீர் என்று அப்பர் பெருமான் இந்த பாடலில் கூறுவதால், மந்திரிகள் வந்த சமயத்தில், அப்பர் பிரான் சிவ வேடம் தாங்கி, உழவாரப் பணி செய்தவாறு இருந்தார் என்று புலனாகின்றது.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">சடையை உடையவனும், ஒரு காதில் சங்க வெண்குழை அணிந்தவனும், சாம்பலை உடலில் பூசியவனும், உடலில் பாம்பினை அணியாக அணிந்தவனும், இடபத்தை வாகனமாக உடையவனும், புலியின் தோலை மேலாடையாக அணிந்தவனும், வெள்ளி போல் திகழும் புள்ளிகளை உடைய உழை மானின் தோலால் அமைந்த உடையினை உடையவனும் ஆகிய சிவபெருமான் எம்மை உடையவன் ஆவான். இதனை நீர் உணர்க. யாம் பாசத்தை முற்றிலும் அறுத்த நிலையில் துறவியாக இருக்கின்றோம். எனவே உம்மையும் உம்முடன் வந்துள்ள படைகளையும் உடையவனான பல்லவ மன்னனின் ஆணைகளுக்கு பணிய வேண்டிய அவசியம் எமக்கு இல்லை.</p>