22. கடவுளைக் கடலுள் எழு - பாடல் 5
பாலில் மறைந்துள்ள நெய், தயிரினைக் கடைந்தால் வெளிப்படுவது போன்று நமது உள்ளத்தில் இறையுணர்வு
பாடல் 5
நெய் ஒப்பானை நெய்யில் சுடர் போல்வதோர்
மெய் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார்
ஐ ஒப்பானை அரத்துறை மேவிய
கை ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">ஐ = தலைவன். கை = கையும் ஊன்றுகோலும். நெய் என்றதும் நமக்கு அப்பர் பிரான், பாலில் நெய் கலந்திருப்பது போன்று இறைவன் அனைத்து உயிர்களிலும் கலந்து நிற்கும் தன்மையை விளக்கும் பாடல் (5.90.10) நினைவுக்கு வருகின்றது. அரணிக்கட்டையில் தீ மறைந்து நிற்பது போலவும், பாலில் நெய் மறைந்து நிற்பது போலவும், தீட்டப்படாத மாணிக்கக் கல்லில் பிரகாசம் மறைந்து இருப்பது போலவும், மறைந்து நிற்கும் இறைவன், நமக்கு எதிரே தோன்றுவான் என்று கூறும் பாடல். நாம் என்ன செய்தால் அவன் நம் முன்னர் தோன்றுவான் என்பதை பாடலில் கடை இரண்டு அடிகள் உணர்த்துகின்றன. நமக்கு அவனுக்கு இடையே உள்ள, இறைவன் - அடியார் என்ற உறவினை கோலாக நட்டு, நமது மனத்தினில் தோன்றும் இறையுணர்வு எனப்படும் கயிற்றினை அந்த கோலுடன் சுற்றிவிடாமல் கடைந்துகொண்டு இருந்தால், கடையப்படும் தயிர் நெய்யினை தோற்றுவிப்பது போலவும், கடையப்படும் அரணிக் கட்டை தீயினைத் தோற்றுவிப்பதைப் போன்றும், கடையப்படும் மாணிக்கக் கல் அதிகமான ஒளியுடன் மிளிர்வது போன்றும், இறைவனின் தோற்றும் நமக்குத் தோன்றும் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.</p><p align="JUSTIFY">விறகில் தீயினன் பாலில் படுநெய் போல்<br />மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்<br />உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்<br />முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">பாலில் மறைந்துள்ள நெய், தயிரினைக் கடைந்தால் வெளிப்படுவது போன்று நமது உள்ளத்தில் இறையுணர்வு கொண்டு கடைந்தால் நமக்கு வெளிப்படுபவனும், நெய்ச்சுடர் போன்ற உருவினனும், தேவர்கள் அறிய முடியாதவனும், நமக்கு பெரிய வியப்பாகத் தோன்றுபவனும், இடர்கள் நம்மை எதிர் நோக்கும்போது நமக்கு கை போன்றும் ஊன்றுகோல் போன்றும் உதவி செய்பவனை, அரத்துறை தலத்தில் உறையும் சிவபெருமானை காணுங்கள். அவனைத்தான் நாம் தொழுகின்றோம்:</p>
Advertisement