33. அரியானை அந்தணர் - பாடல் 3
தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானையை அடக்கி, அதன் தோலை உரித்து, அந்த தோலை மேலாடையாகத் தனது உடலின் மீது போர்த்துக்கொண்டு
பாடல் 3
கருமானின் உரி அதளே உடையா வீக்கிக் கனைகழல்கள் கலந்து
ஒலிப்ப அனல் கை ஏந்தி
வருமானத் திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர்மதியம் சடைக்கு
அணிந்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தாள் அமர்ந்து காண அமரர் கணம்
முடி வணங்க ஆடுகின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத
நாளெல்லாம் பிறவா நாளே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">கருமான் = யானை. அதள் = தோல். வீக்கி = கட்டி. கனைகழல் = ஒலி எழுப்பும் கழல்கள். கழல்கள் காலில் அணியும் ஒரு ஆபரணம் ஆகும். மானம் = பெருமை. மடித்து என்ற சொல் மட்டித்து என்று மருவியது. மானேர் நோக்கி = மானைப் போன்ற மருண்ட பார்வையினை உடைய பார்வதி தேவி. இந்த பாடல் சிவபெருமானந்து ஆடல் சிறப்பினை எடுத்துக் கூறுகின்றது. வாண்முகம் = வாள்*முகம் = வாள் போன்று ஒளியினை வீசும் முகம்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானையை அடக்கி, அதன் தோலை உரித்து, அந்த தோலை மேலாடையாகத் தனது உடலின் மீது போர்த்துக்கொண்டு, தனது காலில் அணிந்திருக்கும் கழல்கள் எழுப்பும் ஒலி மற்ற ஒலிகளுடன் கலக்குமாறும், கையில் அனல் ஏந்தியும், பெருமைக்குரிய தோள்கள் மடிந்து அசையுமாறும், வளர்கின்ற பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்தும் சிவபெருமான் நடனம் ஆடுகின்றான். மானைப் போன்று மருண்ட பார்வையை உடையவளும், ஒளிவீசும் முகத்தைக் கொண்டவளும் ஆகிய பார்வதி தேவி, இந்த அழகிய நடனத்தைக் கண்டு ரசிக்கின்றாள். இவ்வாறு நடனம் ஆடும் பெருமானை, தேவர் கணங்கள், தங்களது தலையைத் தாழ்த்தி வணங்குகின்றார்கள். இத்தகைய பெருமை வாய்ந்த நடனம் ஆடும் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாட்கள் எல்லாம் வீணாகக் கழிக்கப்பட்ட நாட்கள் ஆகும்; அந்த நாட்களை வாழ்ந்த நாட்களாக கருதுவது தவறு.</p><p align="JUSTIFY"> </p>
Advertisement