34. பாளையுடைக் கமுகோங்கி - பாடல் 3
பொன்னாகிய தில்லை என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதால், அவர் காலத்திலேயே கோயிலுக்கு பொன் கூரை வேயப்பட்டு இருந்ததாக
பாடல் 3
தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பரியான்
Advertisement
பொடிக் கொண்டு அணிந்து பொன்னாகிய தில்லைச் சிற்றம்பலவன்
உடுத்த துகில் கண்ட கண் கொண்டு மற்றினிக் காண்பதென்னே
விளக்கம்
சிவபெருமானை எப்போது கண்டாலும், புதிய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை பெருமானுக்கு அணிவித்து, தூபமும் சந்தனமும் கொண்டு அவரை வழிபடவேண்டும் என்பது விதி. அந்த வழிபாட்டு முறையினை அப்பர் பிரான் இந்த பாடல் மூலம் உணர்த்துகின்றார்.
பொன்னாகிய தில்லை என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதால், அவர் காலத்திலேயே கோயிலுக்கு பொன் கூரை வேயப்பட்டு இருந்ததாக நாம் உணர்கின்றோம். பனைக்கை மும்மத வேழம் என்று தொடங்கும் பதிகத்தின் (5.2) எட்டாம் பாடலில் அப்பர் பெருமான் சிற்றம்பலத்தை, தேவர்கள் தூய செம்பொன்னினால் எழுதி மேய்ந்த கூரை உடைத்தது என்று கூறுகின்றார். பராந்தகச் சோழன் அப்பர் காலத்திற்கு பிற்பட்டவர் ஆதலால் காலத்தால் பழுதுபட்ட பொன் கூரையை அவர் புதுப்பித்திருக்கலாம் என தோன்றுகின்றது. எழுதி வேய்ந்தவை என்று அப்பர் பிரான் குறிப்பிட்டிருப்பதால் இந்த அம்பலத்தில் வேயப்பெற்ற பொன் தகடுகள் ஒவ்வொன்றிலும் திரு ஐந்தெழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது என்று உணரலாம்.
முழுதும் வான் உலகத்து உள தேவர்கள்
தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால்
எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை
எங்ஙனம் இழுதையேன் மறந்து உய்வேனோ
பொழிப்புரை
நறுமணம் மிக்க புதிய மலர்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலைகளை அணிவித்து, தூபமும் சந்தனமும் கொண்டு சிவபிரானை அணுகி திருமாலும் பிரமனும் எப்பொழுதும் வணங்கி வழிபடுகின்றார்கள். ஆனாலும் தங்களது முயற்சியால் மட்டுமே இறைவனை கண்டுவிடலாம் என்று அவர்கள் முனைந்தபோது, அவர்களால் அவனது அடியையும் முடியையும் காணமுடியவில்லை. உடலில் திருநீறுப் பொடி பூசிக்கொண்டு பொன் மயமான தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடும் பெருமான் உடுத்திய ஆடையைக் கண்ட கண்களுக்கு, அந்த காட்சியைவிட உயர்ந்த காட்சி வேறெதுவும் இல்லை.