34. பாளையுடைக் கமுகோங்கி - பாடல் 7
வாயு, திருமால் மற்றும் அக்னி ஆகியோரைப் பாகங்களாகக் கொண்டு தயாரித்த அம்பினால், வானில் திரிந்துகொண்டிருந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும்,
பாடல் 7
தெரித்த கணையால் திரிபுரம் மூன்றும் செந்தீயின் மூழ்க
எரித்த இறைவன் இமையவர் கோமான் இணையடிகள்
Advertisement
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
சிரித்த முகம் கண்ட கண் கொண்டு மற்றினிக் காண்பதென்னே
விளக்கம்
தெரித்த கணை = தேர்ந்தெடுத்த அம்பு. மிகவும் வேகமாக காற்றினில் செல்ல வேண்டும் என்று வாயுவினை இறக்கைகளாகவும், தண்டு வலிமையாக இருக்க வேண்டும் என்று திருமாலைத் தண்டாகவும், கூர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அக்னியை நுனியாகவும் கொண்டு தயாரித்த அம்பு என்பதை குறிப்பிடும் வகையில் தெரித்த அம்பு என்று அப்பர் பிரான் இங்கே கூருகின்றார்.
பொழிப்புரை
வாயு, திருமால் மற்றும் அக்னி ஆகியோரைப் பாகங்களாகக் கொண்டு தயாரித்த அம்பினால், வானில் திரிந்துகொண்டிருந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும், நெருப்பினில் மூழ்குமாறு எரித்த, சிவபிரான் தேவர்களின் தலைவன் ஆவார். இவ்வாறு சிறப்பு பெற்ற சிவபெருமானின் திருவடிகளைத் தங்களது மனத்தினில் தரித்த, அடியவர்கள் வாழ்கின்ற தில்லையில் நடனமாடும் சிற்றம்பலவனின், சிரித்த முகத்தினைக் கண்ட கண்களுக்கு, அந்த காட்சியினை விடவும் உயர்ந்த காட்சி வேறேதும் உண்டோ, இல்லை.