34. பாளையுடைக் கமுகோங்கி - பாடல் 8
தேவர்களும் தேவர்கள் தலைவன் இந்திரனும், சுற்றிலும் சூழ்ந்துகொண்டு, சிவபிரானே உனது திருப்பாதங்கள் அல்லாமல்
பாடல் 8
சுற்றும் அமரர் சுரபதி நின் திருப்பாதம் அல்லால்
பற்று ஒன்று இலோம் என்று அழைப்பப் பரவையுள் நஞ்சை உண்டான்
Advertisement
செற்று அங்கு அனங்கனைத் தீ விழித்தான் தில்லை அம்பலவன்
நெற்றியில் கண் கண்ட கண் கொண்டு மற்றினிக் காண்பதென்னே
விளக்கம்
பரவை = கடல், இங்கே பாற்கடல். சுரர் = தேவர்கள். சுரபதி = இந்திரன். அனங்கன் = உருவம் இல்லாதவன், மன்மதன். தனது தவத்தினைக் கெடுக்க முயன்ற மன்மதனை, தனது நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கி அவனது உடலினை எரித்த பின்னர், இரதி தேவி இறைவனிடத்தில், தனது கணவன் மன்மதனுக்கு உயிர்ப் பிச்சை தருமாறு வேண்டினாள். இரதி தேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி, சிவபிரான் மன்மதனை உயிர்ப்பித்தார். ஆனால் உயிர் பெற்ற மன்மதனை இரதி தேவி மட்டுமே காணமுடியும் என்றும் மற்றவர்களின் கண்ணுக்கு மன்மதன் தோன்றமாட்டான் என்ற நிபந்தனையும் விதித்தார். இவ்வாறு மற்றவர்களுக்கு உருவம் ஏதும் இல்லாதவனாகவும், தனது மனைவி இரதி தேவிக்கு மட்டும் உருவத்துடன் காட்சி அளித்தமையாலும், மன்மதன், உருவம் இல்லாதவன், அங்கம் இல்லாதவன் என்று பொருள்பட அனங்கன் என்று அழைக்கப்பட்டான். அனங்கன் என்று குறிப்பிட்டு, இறைவன் நெற்றிக்கண்ணால் நிகழ்த்திய வீரச் செயலையும், மன்மதனை உயிர்ப்பித்த இறைவனது கருணையையும் ஒரு சேர உணர்த்தும் விதத்தில் அனங்கன் என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை
தேவர்களும் தேவர்கள் தலைவன் இந்திரனும், சுற்றிலும் சூழ்ந்துகொண்டு, சிவபிரானே உனது திருப்பாதங்கள் அல்லாமல் எங்களுக்கு வேறு பற்றுக்கோடு இல்லை என்று இறைஞ்சி, தங்கள் அனைவரையும் பாற்கடலிலிருந்து எழுந்த விடத்தின் தாக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று வேண்ட, அவர்களை காப்பாற்றும் வண்ணம், ஆலகால விடத்தை உண்டவன் தில்லை அம்பலத்தில் நடமாடும் சிவபெருமான். அத்தகைய வல்லமை வாய்ந்த சிவபெருமான், மிகுந்த கோபத்துடன் மன்மதனை எரித்து, அவனை உருவம் ஏதும் இல்லாதவனாக மாற்றினான். இவ்வாறு மன்மதனை விழித்து எரித்த, நெற்றிக் கண்ணினைக் கண்ட கண்களுக்கு, அதனினும் மேம்பட்ட காட்சி வேறேதும் உளதோ, இல்லை.