46. மண்ணளந்த மணிவண்ணர் - பாடல் 8
பழனம் மிகவும் பழமையான தலம்
பல்லார் பயில் பழனம் பாசூர் என்று பழனம் பதி பழமை
சொல்லி நின்றார்
நல்லார் நனிபள்ளி இன்று வைகி நாளைப் போய் நள்ளாறு
சேர்தும் என்றார்
சொல்லார் ஒரு இடமாத் தோள் கை வீசிச் சுந்தரராய்
வெந்த நீறாடி எங்கும்
மல்லார் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு
அங்கே மன்னினாரே
விளக்கம்
மல்லார் = வளம் பொருந்திய. அடிகளே உமது ஊர் யாது என்று அப்பர் நாயகி கேட்டதற்கு, பெருமான், ஓர் ஊரினைக் குறிப்பிடாமல் பல இடங்களை குறிப்பிட்டது, பெருமான் தன்னைத் தவிர்ப்பதற்காகத்தான் என்பதை புரிந்து கொண்ட நாயகி, பெருமான் வலம்புரத்தில் உறைவதை தான் அறிந்துகொண்டதை உணர்த்தும் பதிகம்.
பொழிப்புரை
Advertisement
பல வகையான மனிதர்களும் தொடர்ந்து தன்னை வணங்கி வழிபடும் தலமாகிய பழனம் தனது பதி என்றும், பழனம் மிகவும் பழமையான தலம் என்று குறிப்பிட்டு தானங்கே பண்டைய நாளிலிருந்தே உறைவதாக கூறிய பெருமான், பாசூர் தலமும் தனது பதி என்றார். ஆனால் இந்த இரண்டு இடங்களுக்கும் செல்லாமல், இன்று நனிபள்ளி சென்று தங்கிவிட்டு அடுத்த நாள் அங்கிருந்து நள்ளாறு சென்று சேர்வதாக கூறினார். இவ்வாறு எந்த ஒரு இடத்தையும் தனது ஊராக குறிப்பிட்டுச் சொல்லாத பெருமான், தனது தோள்களையும் கைகளையும் அகல வீசியவராய், அழகான கோலத்துடன், தனது மேனியெங்கும் திருநீறு பூசியவராய், வளம் நிறைந்த வயல்கள் சூழ்ந்ததும் மாட வீதிகள் நிறைந்ததும் ஆகிய வலம்புரம் தலம் வந்தடைந்து, ஆங்கே நீங்காது உறைகின்றார்.